Shadow

நண்பேன்டா பார்த்தாவின் ‘குலுகுலு’ – உதயநிதி ஸ்டாலின்

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், மேயாத மான் படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. ஜூலை 29 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, ஜூலை 22 அன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “நான் வேலை பார்த்த படங்களில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்தப் படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனது இண்டிபெண்டண்ட் ஆல்பமாக இருக்கும். இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ரத்னகுமார், “நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்தப் படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார் தான் காரணம். இந்தப் படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களைச் செய்தோம், சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார். இந்தப் படத்திற்காக இயக்குநர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள் உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப் படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ் செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது. இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதைச் சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான். இந்தப் படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. எல்லாப் பாடல்களும் உங்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்தப் படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குனர் ஜாக்கி. படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்தப் படத்திற்கு பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம்” என்றார்.

நடிகர் சந்தானம், “இந்தக் கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்குத் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்தப் படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பைப் போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறைய இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னாவுடனான நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்தப் படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்தப் படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின், “இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேன்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்தப் படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்தப் படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்தப் படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

இந்தப் படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.