1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 2016-ஆம் ஆண்டில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மெரினா புரட்சி தான் பெரிய போராட்டம்.
அப்போராட்டத்திற்கான முதல் புள்ளியை வைத்தவர்கள் யார்? அப்போரட்டத்தின் போது நடைபெற்ற அரசியல் சூதாட்டங்கள் என்ன? அப்போராட்டத்திற்கு எதிராக நின்ற இரண்டு தமிழர்கள் பற்றிய தகவல்கள் என படம் பல ஆச்சர்யம் & அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் படமாகப் பதிவு செய்வதில் தான் இயக்குநர் எம்.எஸ் ராஜ் வெற்றி பெற்றுள்ளாரே ஒழிய இதை ஒரு நல்ல திரைக்கதையாக மாற்ற இயலவில்லை அவரால்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள் ஒரு இளைஞனும் இளைஞியும். சேனல் நிர்வாகி இவர்களுக்கான டெஸ்ட் ஆக ஜல்லிக்கட்டு வரலாற்றையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சேகரிக்கச் சொல்கிறார்.
வரலாற்றையும் தகவல்களையும் திரட்டும் அவர்கள் அதை சேனல் நிர்வாகி உள்ளிட்டவர்களிடம் விளக்குகிறார்கள். அதன் மூலம் ஆடியன்ஸுக்கும் அந்தத் தகவல்கள் தரப்படுகிறது.
தொடக்கமும் முடிவும் சரியாக அமைந்த அளவிற்கு நடுப்பகுதியில் திரைக்கதை சரியாக அமைந்திருந்தால் மெரினா புரட்சியைக் கொண்டாடி இருக்கலாம். ஆனாலும் வளரும் இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் நிரம்பவே இருக்கின்றன.
– ஜெகன் சேட