Shadow

“என்னுடைய அப்பா சூப்பர் ஹீரோ” – கீர்த்தி பாண்டியன் | அஃகேனம்

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் உதய்.K, ”இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும், அல்லது, இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும், பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். இதற்கு என் அம்மா தான் காரணம்.

அம்மாவிற்கு அடுத்ததாகத் தயாரிப்பாளர் அருண் பாண்டியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். என்னை நம்பி என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார். இதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும். அவர் நினைத்தால் ஒரு ஃபோன் காலில் யாரை வேண்டுமானாலும் அழைத்துப் பணியாற்றச் சொல்லலாம். ஆனால் என்னையும், என் குழுவினரையும் நம்பி இந்த வாய்ப்பை அளித்திருக்கிறார். இதை நாங்கள் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறோம். இதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாழ்க்கை முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் குறும்படத்தை இயக்கி விட்டு நேரடியாகப் படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்தத் தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களை விட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம். அவரும் நாங்களும் இணைந்து தான் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாகத் தரமான படமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.

கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்தக் கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது. நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் அந்த இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ, அந்த இந்திராவாகத்தான் இந்தப் படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.

அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினைப் பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாகச் சொன்னோம். அவரும் இந்த டைட்டில் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால் நாம் தெரியப்படுத்துவோம் என எங்களுக்கு ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் என நம்புகிறேன்.

ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு இந்தப் படம் ஏற்றதாக இருக்கும். ஒரு புது குழுவாக எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து ஒரு படத்தை வழங்குகிறோம். ஜூலை நான்காம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை கீர்த்தி பாண்டியன், ”நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் உதய் என்னை சந்தித்து இப்படத்தின் கதையைச் சொன்னார்.‌ அதற்கு முன் அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினைக் காண்பித்தார். அந்த குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம்,அதன் தொழில்நுட்ப தரம் சிறப்பானதாக இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.

அதன் பிறகு மீண்டும் என்னைச் சந்தித்து அந்தக் குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவினர் அனைவரும் படத்திலும் பணியாற்றுவார்கள் என அவருடைய வேண்டுகோளை உறுதியாகச் சொன்னார்.‌ அவரது இந்த நிலைப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌ புது குழுவினருடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுக்குள் இருக்கும் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது.‌ அதைவிட ஆர்வத்துடன் அப்பா இந்தப் படத்திற்குள் வருகை தந்தார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடிகராக இல்லாமல் அதையும் கடந்து இந்தப் படத்தின் பணிகளில் தீவிர ஆர்வம் காட்டினார். படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில் தான் இருக்கும்.

அப்பா ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ ஆகிய படங்களின் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் நான் பிறக்கவில்லை. அவருடைய திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கூட்டத்துடன் இணைந்து எவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றி இருப்பாரோ அதே அளவு ஆர்வமும் ஊக்கமும் இந்தப் படத்தின் பணிகளிலும் அவர் காட்டியதாக நான் உணர்ந்தேன்.

நான் இந்தப் படத்தில் நடிகையாக மட்டும் தான் பங்களிப்பு செய்திருக்கிறேன். நம்மைச் சுற்றி நிறைய விசயங்கள் நடைபெறுகிறது. விபத்து, போர், இழப்பு என ஏராளமான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் டிஸ்டர்ப்பாக இருக்கிறது.

இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி எப்போதும் எழுந்து கொண்டே இருக்கும். இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என மனதில் கேள்வி எழுந்து கொண்டிருக்கும். இதற்கு எனக்குக் கிடைத்த ஒரே பதில், எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான். ஒரு சிறிய அளவிலாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் தான் நான் நடித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இது ஒரு படம். இந்தப் படத்தில் சில கேரக்டர்களுக்கு சில விஷயங்கள் நடக்கிறது. அந்தச் சூழலை அந்தக் கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறார்கள், எப்படி கடந்து செல்கிறார்கள் என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம். அது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.‌ அதனால் இதனைப் பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம்.

இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவனை வாழ்த்துகிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக அப்பா எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ. சூப்பர் ஹீரோ அப்பா தான். இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு ட்ரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால், நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்” என்றார்.

நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், ”இந்தப் படத்தில் மூன்று சிறப்பம்சங்கள் இருக்கிறது. எல்லாரும் புது தொழில்நுட்பக் கலைஞர்கள். கீர்த்தி சொன்ன பிறகு இந்தக் குழுவினருடன் கதையைக் கேட்டேன். கதையும் எனக்குப் பிடித்திருந்தது. அவர்களிடம் இந்தக் கதையில் சிறிதளவு இணைந்து பணியாற்ற வேண்டியது இருக்கும். உங்களுக்குச் சம்மதமா எனக் கேட்டேன். அவர்களும் சரியெனச் சம்மதித்தார்கள்.

அதன் பிறகு இயக்குநர் என்னிடம் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறோம் என்றார். அவர்களுக்கு ஏதேனும் அனுபவம் இருக்கிறதா, அவர்களின் திறமை என்ன எனக் கேட்டபோது, அவர்கள் வெளியில் தான் நிற்கிறார்கள். உள்ளே வரச் சொன்னால் அவர்கள் தங்களின் திறமையைக் காண்பிப்பார்கள் என்றார். அந்தத் தருணத்தில் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைவரும் வந்திருந்தனர்.‌ அவர்களின் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தருணத்தில் தான் நம்முடைய அனுபவத்தை இவர்களுக்கு வழங்கலாம் எனத் தீர்மானித்தேன்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஒரிசாவில் நடைபெற்ற போது அவர்களின் ஒருங்கிணைப்பு வியப்பை ஏற்படுத்தியது. நான் ‘ஊமை விழிகள்’ படத்தில் பணியாற்றும்போது இருந்த ஆர்வம் இவர்களிடத்தில் தென்பட்டது. இதனால்தான் என்னுடைய குடும்பத்தார்களை விட இரண்டு வருடங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். இந்தப் படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.