
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்ட சரித்திரக் காவியம் ‘கண்ணப்பா’ ஆகும். இதில், பிநடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
‘கண்ணப்பா படத்தை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன?’
விஷ்ணு மஞ்சு, “கண்ணப்பா கதை 3 ஆவது நூற்றாண்டில் நடக்கிறது. அந்தக் காலகட்டத்தில் நீர், காற்று, வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கண்ணப்பா கதையை என்னிடம் கொடுத்தவருக்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால், நான் அந்தக் கதையை விரிவுப்படுத்தி எழுதியதோடு, படப்பிடிப்புக்கான இடத்தைத் தேர்வு செய்யத் தொடங்கி விட்டேன். உலகின் பல நாடுகளுக்குச் சென்று பார்த்த போது, நியூசிலாந்து நாடு தான் சரியான இடமாக இருந்தது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்து தான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்திருக்கும். ஆனால் நாம் அதை இப்போது கெடுத்து விட்டோம். கண்ணப்பா படத்தின் கதை அப்படி ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அங்குப் படப்பிடிப்பு நடத்தினேன். படத்தில் நீங்கள் பார்க்கும் போது கிராஃபிக்ஸ் என்று நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் லைவானவை. அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாக இருக்கும்” என்றார்.
மேலும், “கண்ணப்பா யார் என்ற ஆரம்பக் கதையை காமிக்ஸாக வெளியிட்டு இருக்கிறோம். இரண்டு தொகுப்புகளாக இதுவரை 80 ஆயிரம் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாவது தொகுப்பையும் வெளியிட உள்ளோம். கண்ணப்பா காமிக்ஸுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பு, நிச்சயம் படத்திற்கும் கிடைக்கும்” என்றார் விஷ்ணு மஞ்சு.