Shadow

ராமன், எத்தனை ராமனடி?

ஆந்திரத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று. அடுத்ததாக ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை. வியப்பு. வாத்சல்யம். எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள் என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம். ஒரு பக்கம் தெலுங்கானா பிரச்சினை. நக்சலைட் நெருப்பு. இதற்கு நடுவில் ராம பக்தி. எந்த ராமன்? தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும், நடந்தும், கிடந்தும் என வருகிற ராமன். மனித குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன். இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றிய இடம், சீதை இருந்த இடம், அனுமன் தாவிய இடம் என்று குருதிக்கோட்டுடன் வரும் தொன்மங்கள் ஊற்றெடுக்கும் ராமன். நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன். சீதையின் பிரிவுக்காக மனம் கலங்கி அழுத சீதா ராமன். தந்தை வாக்கைக் காப்பாற்ற நாடு துறந்த தசரத ராமன். அதே சீதையை ராஜனின் தர்மம் என்ற காரணத்துக்காகக் காட்டுக்கும் அனுப்பிய ராஜா ராமன். காந்தியின் ஆதர்ச ரகு ராமன்.

இன்னொரு பக்கம். தொடர்ச்சியாக அரசியலாக்கப் பட்டுவரும் ராமன். போன தடவை ஆந்திரத்தில் பயணம் செய்யும்போது ஒரு கிழவரைச் சந்தித்தேன். கையில் தம்புரு போன்ற ஒரு கருவியுடன் ராமனைப் பற்றி ஏதோ ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். பிச்சை எதுவும் கேட்கவில்லை. நாங்கள் சாப்பிடும்போதெல்லாம் பாடிக் கொண்டே இருந்தார். டிக்கட் இல்லை என்று தெரிந்தது. டிடிஆர் எதுவும் கேட்கவில்லை. சிலர் அவருக்குத் தாங்கள் சாப்பிடுவதைக் கொடுத்தபோது மறுக்காமல் வாங்கிக் கொண்டார். ஒரு முஸ்லீம் குடும்பமும் இதில் அடக்கம். பர்தா அணிந்த அந்தக் குடும்பத்தின் பெண்கள் இருவரும் அவர் பாடல்களை உன்னிப்பாகக் கேட்டவாறே வந்தனர்.

அவரது பாடல்கள் சில எனக்குப் பரிச்சயமானவை. தியாகராஜரின் கிருதிகள் போலத் தோன்றியவை. சில ஆந்திரத்தில் புழங்கும் நாட்டுப்புறப் பாடல்களாக இருக்கக்கூடும் என யூகித்தேன். அவரே சில பாடல்களைப் புனைந்து பாடுகிறார் என்பதையும் அவர் முகத்திலிருந்து யூகித்தேன். மத்திய குரலில் அவர் சீராகப் பாடிக் கொண்டே வந்தார். எல்லாமே ராமனைப் பற்றி, சீதையைப் பற்றி, அனுமனைப் பற்றி. யாரோ ஒருவர் தூங்கவேண்டும் என்று ஆட்சேபித்த சமயம் மட்டும் பாட்டை நிறுத்திவிட்டார். ஆனால் அப்போதும் மனதுக்குள் பாடிக் கொண்டுதான் இருந்தார் என்று முகபாவனைகளில் தெரிந்தது. எங்கள் செவிகளுக்குக் கேட்காத ஒரு ஸ்வர இழையில் சேர்ந்து கொண்டு உள்ளே கசிந்து கொண்டிருந்தார்.

நாங்கள் அவரிடம் பேச்சு கொடுத்தோம். நானும் எனது நண்பரும். நண்பர் ஒரு இந்துத்துவர். அவருக்கு ஓரளவு தெலுங்கு தெரியும். எனக்கு லேசு லேசாகப் புரியும். கிழவருக்கு லேசாகத் தமிழும் தெரிந்திருந்தது. ‘ராமேஸ்வரத்துக்கும், கும்பகோணத்தில் ஒரு ராமன் கோயிலுக்கும் வந்திருக்கிறேன்’ என்று சொன்னார். எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் ராம வழிபாடு அத்தனை தீவிரமாக இல்லை என்று சொன்னேன். தவிர நாங்கள் சைவ பாரம்பர்யத்தில் வந்தவர்கள். ஆரம்பத்தில் அவருடன் எனது நண்பர்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு தவறு செய்துவிட்டார். ராமபக்தர் என்பதால் அவர் ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளராகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துவிட்டார். ராமனை மையப்படுத்திய அரசியல் பற்றி பேச்சு வந்ததுமே அவரது புன்னகை மறைந்தது. ”அய்யா நீங்கள் பேசுவது எங்களது ராமனைப் பற்றியதல்ல” என்று சொல்லிவிட்டார். எங்களை விட்டு விலகிப் போய் அமர்ந்து கொண்டார். அதன் பிறகு அவருடன் தொடர்ந்து பேச எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவுமே பலிக்கவில்லை.

ஆனால் அவர் முகம் மாறிவிட்டது. எங்களையே அடிக்கண்ணால் பார்ப்பதும் முணுமுணுப்பதுமாக இருந்தார். எங்களிடையே ஓர் இழை அறுந்து போனதை நான் உணர்ந்தேன். அவர் உதடுகள் பேசாவிட்டாலும், உள்ளுக்குள் அசைந்து கொண்டே இருந்தது. அவர் எதையோ தீவிரமாகச் சொல்ல நினைக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் மந்திராலயம் நெருங்கும் முன்பு எங்களை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு சட்டென்று உரத்த குரலில் பாட ஆரம்பித்துவிட்டார். அதன் சுமாரான மொழிபெயர்ப்பு இது.

அய்யா
எங்கள் ராமன் உங்கள் ராமன் அல்ல
எங்கள் ராமன்
தவளைக்கும்
கல்லுக்கும்
கூனிக்கும்
குகனுக்கும்
மந்திக்கும்
ஏன்
எதிரிக்கும் கூட கருணை செய்யும் ராமன்
துணி தோய்ப்பவன்
சொல்லுக்கும் காதுள்ள ராமன்
அப்பன் சொல்லுக்காக
ராஜ்ஜியம் அத்தனையும்
விட்டுப் போன ராமன்
கல்லும் முள்ளும் குத்த
காடுகளிலும் மேடுகளிலும்
கட்டிய ஒரே பத்தினியைத் தேடி அலைந்தவன்
உங்கள் ராமனோ எளியோரையும்
முதியோரையும்
பெண்களையும் வதைக்கின்ற ராமன்
தோளில் உள்ள சிசுவையும்
வயிற்றில் உள்ள சிசுவையும்
சேர்த்தழிக்கிற ராமன்
அரக்கனுக்கும் அடுத்த நாள் தந்த
எங்கள் ராமனை நீங்கள் அரக்கனாக்கினீர்கள்
அய்யா
அரக்கனாகியதன் மூலம்
எங்கள் ராமனின் ஆன்மாவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்
ஐயோ
எங்கள் ராமனை நீங்கள் கொன்று போட்டீர்கள்
கொன்று போட்டீர்கள்!

நாங்கள் உறைந்து போய் நின்றுவிட்டோம். பெரிய மௌனம் பெட்டி முழுவதும் நிலவியது. எனது நண்பரின் முகம் மிகச் சிவந்துவிட்டது. அடிப்படையில் அவர் மென்மையானவர். நாங்கள் மந்திராலயவில் இறங்கிவிட்டோம். இறங்கி வெளியே கூரை வேய்ந்த கடையில் சிறிய குவளையில் டீ குடித்தோம். நண்பர் என் கண்களைச் சந்திக்க மறுத்தார். சந்தித்த போது பதறி விலகி, ”பைத்தியக்காரன், பைத்தியக்காரன்” என்றார்.

– போகன் சங்கர்