Shadow

“விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை யோசித்தே எழுதினேன்” – சிந்துபாத் இயக்குநர்

Sindhubaadh-audio-launch

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக் பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில், S.U.அருண்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ராஜராஜன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, “இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த சிந்துபாத்தின் பயணம் தொடங்கியது. இதனை இயக்குனர் அருண்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எங்கள் குழு மீது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முழு நம்பிக்கை வைத்தார். அதனை அனைவரின் ஒத்துழைப்புடன் காப்பாற்றி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்கி இருக்கிறோம். விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகவும் கடினமாக உழைத்த படம் இது தான். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் கடினமாக உழைத்தார். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதனையடுத்துப் படத்திற்கு மற்றொரு தூணாக இருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா” என்றார்.

இயக்குநர் அருண்குமார், “முதலில் இந்தக் கதையை பல முன்னணி நாயகர்களிடம் சொன்னேன். அவர்கள் யாரும் நடிப்பதற்கு முன் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் என்னை விஜய் சேதுபதி அழைத்து நாமே இணைந்து பணியாற்றுவோம் என்றார். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஒரே ஒரு முறை மட்டுமே கதையை கேட்டார். அதன் பிறகு குறுக்கிடவே இல்லை. கதைக்கு என்ன தேவையோ அதை வழங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் வேகமாக இயங்குவதற்கு முழுமையான காரணம் அவர்தான். நான் யுவன்சங்கர்ராஜாவின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற முதலில் தயங்கினேன். அவர் நமக்கு சௌகரியமாக இருப்பாரா என்றும் எண்ணினேன். ஆனால் அவர் நான் நினைத்ததை விட மிக எளிமையாகப் பழகினார். திரைக்கதைக்கு என்ன தேவையோ அதை அளித்தார்.

அதன் பிறகு நடிகை அஞ்சலி. கதை முழுவதும் அவரைச் சுற்றி தான் நடக்கிறது. அவர்களும் அதை உணர்ந்து நன்றாக நடித்துக் கொடுத்திருக்கிறார். பா விஜய், கார்த்திக் நேத்தா, விவேக் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா படம் முழுவதும் வரக்கூடிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்தக் கதையை யோசிக்கும்போதே இந்தக் கேரக்டரில் சூர்யா தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அதை விஜய் சேதுபதியிடமே சொல்லியிருந்தேன். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்” என்றார்.