
மொபைலில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு வரும் ஒவரைத் தவிர்க்க, எதிரே பைக் ஓட்டி வரும் இளைஞன், சாலையில் அமர்ந்திருக்கும் முதியவர் அப்புசாமி மீது ஒரு அவ்விளைஞன் பைக்கால் மோதி விடுகிறான். அவரது வலது கையில் தீக்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு செல்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாசாமி, தனக்கு காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, நீதிமன்றமோ ஒரு வினோதமான தீர்ப்பை அளிக்கிறது.
சாதிய ஏற்றதாழ்வு, சாதியப் பெருமிதம், ஓர் ஜாதிக்குள் நடக்கும் போட்டி பொறாமை சண்டைகள், அதை மறந்து அவர்கள் இணையும் புள்ளிகள் என படம் பேசும் அரசியல் நுண்ணியமாய் உள்ளது. நீதி இயங்கும் லட்சணம் அடிவயிற்றில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.
முதியவர் அப்புசாமியாக மு.ராமசாமி நடித்துள்ளார். கதையோடு இயல்பாய்ப் பொருந்தும் பாத்திரமாக வருகிறார். ஊரில் ஆதிக்க சாதியினருக்குப் பயந்து அடிபணிவதாகட்டும், தனக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலை நம்புவதாகட்டும், காதல் பிரிவிலுள்ள தனது மகனுக்காக மனைவியிடம் சத்தம் போடும்போதாகட்டும், சாமானியனின் இயலாமையைக் கண் முன் கொண்டு வருகிறார்.
தறி பட்டறையில் உருவாகும் பெளலின் ஜெசிகா – புகழ் மகேந்திரன் காதல் அத்தியாயம் கிளைக்கதையாக ஓடி, படத்தின் மைய அரசியலோடு இயைந்து மறைகிறது. வக்கீல் ஜீவானந்தமாக நாசர் கெளரவ வேடம் ஏற்றுள்ளார். புதிரை வண்ணார், வன்னியர் என்ற பெயர்களைப் பயன்படுத்தாவிட்டாலும், அதைப் பார்வையாளர்களுக்கு மறைவசனங்களால் கடத்துகிறார் இயக்குநர் மகிவர்மன் C.S. நேரடியாக சாதியைப் பேசாததால், படத்தின் நேரடி கருவாக பணக்காரன் Vs ஏழைக்கான நீதி என்பதாகவும் படத்தைப் புரிந்து கொள்ளலாம்.
நீதிமன்றம் யாருக்கானது என்ற கேள்வியை ஓங்கிப் பலமாகக் கேட்கிறது வாய்தா.