Shadow

“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களைச் சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாகக் கேட்டார். படப்பிடிப்புத் தளத்தில் நான் எந்தக் காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பைக் கடந்து, அந்தக் காட்சியை வியக்கும் அளவிற்கு நடிப்பார். அவரின் நடிப்பு திறமையைக் கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும். நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால், அவர் 100% அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும் அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட்.

படப்பிடிப்பின் போது எனக்கு உதவியாகப் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ஏனெனில் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது அங்கு சீதோஷ்ண நிலை மைனஸ் முப்பது டிகிரி. கடந்த 30 ஆண்டுகளில் மோசமான பருவநிலை என்று அவர்கள் தெரிவித்தார்கள். இந்தச் சூழலில் நாங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதிக குளிர் காரணமாக பத்து நிமிடத்திற்கு மேல் பணியாற்றிய இயலாது. அதற்கு மேல் பணியாற்றினால் மூக்கிலிருந்து ரத்தம் வழியும். இத்தகைய கடினமான உழைப்பை வழங்கி, இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக உதவியாளர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

கோப்ரா படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்தப் படத்தின் பதினைந்து நிமிட காட்சிகளைப் பார்த்துவிட்டேன். இந்த படம் பெரிய வெற்றியைப் பெறும், விக்ரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எப்படி அவரது ரசிகராக இருந்து இயக்கி வெற்றிப் பெற்றாரோ, அதே போல் இந்த கோப்ரா படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து, விக்ரமின் ரசிகராகயிருந்து இயக்கியிருக்கிறார். அதனால் இந்தப் படமும் விக்ரம் படத்தைப் போல பெரிய வெற்றியைப் பெறும். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு வாழ்த்துகள். இயக்குநர் அஜய்க்கு நான் முதலில் சம்பளம் வழங்கியதாகக் கூறினார். அதற்கு பிறகு உங்களது சம்பளம் உயர்ந்துவிட்டது. கோப்ரா படத்திற்கு பிறகு மேலும் உயரும். சம்பளத்தை அதிகமாக உயர்த்திவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சீயான் விக்ரம், ”கடந்த சில தினங்களுக்கு முன் இதயத்தில் சின்னதாக ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன். அதற்குள் சமூக வலைதள பக்கத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடந்தன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு நெருக்கமானவர்கள் பலர் பதறி அடித்து விசாரித்தார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். இதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் அவர்களின் ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை எனக்கு எதுவும் நடைபெறாது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் போது காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன். அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.

நான் எப்போதும் சினிமாவுக்காகத்தான் இருக்கிறேன். சினிமா மட்டும் தான் என் உயிர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது.

தயாரிப்பாளர் லலித் குமார், எனக்கு அற்புதமான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். எல்லா நடிகருக்கும் நல்லதொரு கதை அமைய வேண்டும். அதனை இயக்குவதற்கு நல்லதொரு இயக்குநர் மற்றும் குழு வேண்டும். இதனை உருவாக்கி கொடுத்த தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கோப்ரா’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது என்றவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி உறுதி என்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். இதற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அஜய் சிறந்த படைப்பாளி. கற்பனைத் திறனில் அவருக்கு நிகர் அவரே தான். அவருடைய ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கோப்ரா’ என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதையும் எனக்குத் தெரியும். அதுவும் வேறு ஜானர். சிறப்பாக இருக்கிறது. அஜய் தொடர்ந்து கடினமாக உழைக்கும் உழைப்பாளி. அவருடைய கடின உழைப்பிற்கும், பேரன்பிற்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

நான் முதன்முதலாக ஏற்றிருக்கும் சிக்கலான கதாபாத்திரம் இது. படத்தில் ஏழு கேரக்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னணி பேசுவதில் வித்தியாசம் காட்ட வேண்டும் என இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று, நிறைய மெனக்கடல் இருந்தது. இது கதாபாத்திரங்களைப் பற்றிய கதை கிடையாது. முழுக்க முழுக்க எமோஷனலை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை. ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக செதுக்கியிருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை எனக்கு எல்லாமே வெற்றியாகத்தான் அமையும். ரசிகர்கள் காட்டும் பேரன்பிற்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தை இல்லை. நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை” என்றார்.