

நாயகனின் முதல் காதல் ஏமாற்றத்திலும், அடுத்த காதல் கல்யாணத்திலும் முடிகிறது.
நாயகனாக விவேக் ராஜகோபால். எந்தக் கவலையுமற்ற ஜாலியாக சுத்திச் சுத்தி வரும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகளில் சிரித்தவண்ணமே உள்ளார். ஆனால் அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கு ஏற்படவில்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறையே! அதேபோல் முதல் காதலி காவல் நிலையத்தில் வைத்து ஏமாற்றிவிட, நாயகன் செம சோகமாகிவிடுகிறார். எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத நாயகன் நிஜமாகத்தான் காதலித்திருப்பாரா என சந்தேகம் நமக்கு தீரும் முன்பே, ஒரு பாட்டிலேயே அவர் சோகத்திலிருந்து மீண்டு பாலை வார்க்கிறார்.
அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என நாயகனின் மொத்த குடும்பமே மருத்துவர்கள். வெளியில் திட்டிக் கொண்டும் உள்ளுக்குள் எதிர்மாறாக இருக்கும் அப்பாவாக பிரமிட் நடராஜனும், கேட்கும் பொழுதெல்லாம் பணம் தரும் பாசக்கார அம்மாவாக மீராகிருஷ்ணனும் நடித்துள்ளார்கள். நாம் சொல்ல வேண்டியதை மீராகிருஷ்ணனே, ‘சரி மொக்கை போடாத’ என அடிக்கடி நாயகனிடம் சொல்கிறார்.
நாயகனின் அண்ணனாக பாலாஜி மோகனும், அண்ணியாக அம்முவும் நடித்துள்ளனர். அம்முவுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அதையே சொல்கிறார் நாயகன். படத்தில் பொறுப்புள்ளவராக இருக்கும் ஒரே கதாபாத்திரம் நாயகனின் அண்ணன்தான். ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல்.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்ற பழமொழிக்கேற்ப, நாயகனைப் பற்றிச் சொல்லி விட்டதால் நாயகனின் நான்கு நண்பர்கள் பற்றிச் சொல்ல அவசியமில்லைதானே!
முதல் காதலியாக ரூபா நடராஜும், இரண்டாவது காதலியாக மேகா பர்மனும் நடித்துள்ளனர். இரண்டாவது காதலிதான் படத்தின் நாயகி. கதைப்படியே தமிழ் தெரியாத டெல்லி வாழ் பெண்ணாக வருகிறார். நாயகன் நாயகியைப் பார்த்ததுமே வழியத் தொடங்கி விடுகிறார். ஆனால் பரவாயில்லை நாயகிக்கு மெல்லத்தான் காதல் வருகிறது.
டைட்டில் போடும் முன் வரும் சின்ன அனிமேஷனிலேயே கதையை அழகாகச் சொல்லி விடுகின்றனர். அதன் பின்தான் சொதப்பல் தொடங்குகிறது. கலகலப்பான ஜாலியான படம் எடுக்க நினைத்திருப்பார் போல இயக்குநர் T.G.கீர்த்தி குமார். ஆனால் திரைக்கதையில் அதற்கான மெனக்கெடல் இல்லை. நிறைய இடங்களில் கலகலப்பாகப் போனாலும் படத்தோடு ஒன்ற முடியவில்லை.


