
தீபாவளி பண்டிகையன்று வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் மேயாத மான் படத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற காட்சிகளில் ஒன்று, மருத்துவமனையில் ஹீரோவும், அவரது நண்ரும் சண்டை போடும் போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இடையே வந்து சமரசம் செய்வது. ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும் அந்தக் காட்சியில் கிறிஸ்தவ பாதரியாக நடித்த டாக்டர் மேஜிக் சரவணகுமார் தியேட்டரில் கைதட்டல் வாங்கியதோடு, நேரில் பலரிடம் பாராட்டும் பெற்று வருகிறார்.
மேஜிக் கலைஞராகவும், சிறந்த பேச்சாளருமாக இருக்கும் டாக்டர் மேஜிக் சரவணகுமார், தனது பேச்சாற்றலுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். மேஜிக் ஷோ நடத்துவது, சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது என்று இருந்த இவர், தற்போது பிஸியான நடிகராகவும் ஆகிவிட்டார்.
‘ஜாக்சன் துரை’, ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள டாக்டர் மேஜிக் சரவணகுமார், ‘மேயாத மான்’ படத்தில் பாதிரியாராக நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றவர். பல பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.
காமெடி, குணச்சித்திரம் என்று அனைத்து வேடத்திற்கும் பொருந்தும் இவர், கருணாகரன் ஹீரோவாக நடித்து வரும் ‘பொதுநலன் கருதி’ படத்தில் கருணாகரனுக்குத் தந்தையாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்த இயக்குநர் தினேஷ் என்பவர், தான் இயக்கும் ‘மெழுகு’ படத்தில் டாக்டர் மேஜிக் சரவணகுமாருக்குப் பெரிய கதாபாத்திரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
மேலும், ‘நான் யார் என்று நீ சொல்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், டாக்டர் மேஜிக் சரவணகுமாரின் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் முறையைப் பார்த்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட பலர் மேடையிலேயே பாராட்ட, அந்த ஏரியாவிலும் சரவணகுமார் பிஸியாகிவிட்டாராம்.
இப்படி மேஜிக், நிகழ்ச்சித் தொகுப்பு, மேடைப்பேச்சு, நடிப்பு என்று பிஸியாக இருக்கும் டாக்டர் மேஜிக் சரவணகுமார், விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘மீண்டும் வா அருகில் வா’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.


