Shadow

ரேகை | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த த்ரில்லர்

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த இணையத் தொடரை உருவாக்கி எழுதி இயக்கியுள்ளார். இதனை S.S. க்ரூப் ஃபெளண்டேஷன் சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்தத் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்.

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றியும் (பாலஹாசன்), காவலர் சந்தியாவும் (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்கத் துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ் கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையைக் கண்டுபிடிக்கிறார். அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவப் பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி பார்வையாளர்களை அந்த உலகிற்குள் இழுத்துக் கொள்கிறது.

தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான த்ரில்லர் சீரிஸாகக் கதைக்களத்திலும் உருவாக்கத்திலும் புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.