Shadow

“ஆனந்த்ராஜ் தான் ஹீரோ” – ‘உயிர் தமிழுக்கு’ இயக்குநர் ஆதம்பாவா

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக மறு பிரேவசம் செய்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் விரைவில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த 20 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரைக் கெளரவிக்கும் விதமாகப் படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம்பாவா, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரைக் கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல கதாநாயகன் தான். இந்தப் படத்தைத் தயாரித்து இந்த நிலைக்குக் கொண்டுவர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான். அதே சமயம் இந்தப் படம் உருவாகும் வரை என்னை அவர் நம்பினார். அவரை நான் நம்பினேன். இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும். இந்தப் படத்தில் ஆக்‌ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் கூட ஹீரோ என்றால் அது ஆனந்தராஜ் தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்” என்று கூறினார்.

நடிகரும் இயக்குநருமான சரவண சக்தி, “நான் முதன்முதலாக இயக்கிய நாயகன் படத்தில் ஆதம்பாவா இணை இயக்குநராகப் பணியாற்றினார். இன்று அவர் இயக்குநராக மாறி இருப்பதும் அவரது டைரக்‌ஷனில் நான் நடித்து இருப்பதும் சந்தோஷம் அளிக்கிறது” என்று கூறினார்.

நடிகர் ஆனந்த்ராஜ், “அமீர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். அவருக்கென என ஒரு தனி இடம் இருக்கிறது. எனக்கு இன்னும் நடிப்புப்பசி இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அரசியல் நையாண்டி மட்டுமே இல்லாமல் ஒரு நல்ல கதையும் இருக்கிறது” என்று கூறினார்.