
பிவி ஃப்ரேம்ஸ் (BV Frames) நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துப் படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முன்னணி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிக முக்கிய சமூக பிரச்சனை ஒன்றைக் காதலும் த்ரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்கள் விரும்பும் படைப்பாக உருவாக்கவுள்ளார்.
பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். அப்படி ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினைப் பற்றி, இப்படம் பேசவுள்ளது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு அழகான வாழ்வியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.
ஜெய், மீனாட்சி கோவிந்தராஜனுடன், யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் & அப்துல் ரஷீத், ஸ்டன்ட் மாஸ்டர் முரளி.G ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் போன்ற இடங்களில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.