32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“செல்ஃபோனால் கலாச்சார சீர்கேடுகள்” – இயக்குநர் பேரரசு குற்றச்சாட்டு

Dinesh R சேலம் Published: 04/01/2022 3 நிமிட வாசிப்பு Updated: 06/01/2022 சினிமா
எழுத்து அளவு:

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பு சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. ஜனவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, “’பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது என்று சொன்னார்கள். சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. இவர்களை விட்டு வைக்கக் கூடாது. ஜெயிலில் தள்ள வேண்டும்.

நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்ஃபோன்கள் தான். தங்கள் பிள்ளைகளிடம் செல்ஃபோன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்ஃபோனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக் கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.

நாடு இப்படிப் போய்க் கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாகப் பயன்படுத்துவது என்று பல இடங்களிலும் நடக்கிறது. நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள், நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை வடிவங்களில் இருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி மதகுருமார்களாக சாமியார்களாக அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

நாம் நம்பிக்கை வைக்கும் அவர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன. எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம்; நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாகக் கடந்து போய்விடுகின்றன.

அப்படித் தவறுகள் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவது என்றால் கூட ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துவிட்டு போய் வந்தது போல் 3 மாதம் 6 மாதம் என்று போய்விட்டு, நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டு சிறைக்குச் சென்று வந்தது போல் மகிழ்ச்சியாக வருகிறான்.

இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.