
கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து எண்பது நாட்களைக் கடந்துவிட்டது.
இதன் காரணமாகத் திரைப்படத்துறை வேலைவாய்ப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றித் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்புப் பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்குக் காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள அம்மா மூவி அசோசியேசன் தங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்கும் பொருட்டு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களை வழங்கிவந்தனர்.
மக்களை ஆளும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், அதனை அமுல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவருகிறது மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லாததுடன் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும் சென்றடையவில்லை. இந்த சூழ்நிலையில் தனது உறுப்பினர்களுக்கு மூன்றாவது கட்டமாக ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும், மளிகை சாமான்களை வழங்கியது அம்மா மூவி அசோசியேஷன்.
இது சம்பந்தமாக அம்மா மூவி அசோசியேஷன் செயலாளர் சரவணனிடம் பேசியபோது, “தமிழ் சினிமாவில் வருடந்தோறும் 200 திரைப்படங்கள் வரை தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன. சுமார் 2000 கோடி மதிப்புள்ள இந்தப் படங்களின் தமிழக வியாபாரம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாட்டு விநியோக உரிமை, ஆடியோ உரிமை, ரீமேக் உரிமை என வியாபாரம் செய்வதற்குச் சரியான நபர்களை அடையாளம் காணத் தயாரிப்பாளர்களுக்குப் பாலமாக இருப்பவர்கள் பிலிம் மீடியேட்டர்கள்.
இவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தமிழ் சினிமாவிற்கு முக்கியமானது. எங்களது இந்த முயற்சிக்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள் என பல தரப்பினரும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர். அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்து வருகிறோம்” என்றார்.