Search

எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி

arulnidhi---eruma-saani-vijay

வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன் மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் நீட்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். MNM Films சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது, ”இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக் கதையைக் கூறிய போதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரீட்சார்த்த முயற்சிகளுக்குச் செவி சாய்ப்பவர் அவர். “ஆறாது சினம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K13” , தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் உருவாகி வெளிவர உள்ள பெயரிடப்படாத புதிய படம் என ஐந்து படங்கள் அவருடன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்ததில் அவரது கதைத்தேர்வு, திரைத்துறையில் தெளிந்த பார்வை மீது பெரும் மரியாதை உண்டானது. எனவே அவர் தான் இப்படத்திற்கு சரியானவர் என அவரை அணுகினோம். அவரும் விஜய் கூறிய திரைக்கதையில் உற்சாகமாகி உடனடியாக ஒப்புக் கொண்டார். இணைய உலகில் “எரும சாணி” மூலம் புகழ் பெற்ற விஜய் ராஜேந்திரன், பெரிய திரையில் இயக்குநராகத் தனது பயணத்தை எனது தயாரிப்பில் தொடங்குவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி”என்றார்.

விஜய் குமார் ராஜேந்திரன் பெரிய திரையில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் வெற்றி பெற்ற “நட்பே துணை” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.