32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 30/03/2022 3 நிமிட வாசிப்பு Updated: 16/07/2022 சினிமா
எழுத்து அளவு:

இந்தியத் திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களைத் தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய திரைப்படம் ‘காதல் காதல்தான்’. ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப் படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் ராம் கோபால் வர்மா, நாயகிகள் நைனா கங்குலி, அப்சரா ஆகியோர் மார்ச் 30 அன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

நாயகி நைனா கங்குலி, “ராம் கோபால் வர்மா சார், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்குப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன் நாயகி காதலிப்பார்கள், ஆனால் இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இதில் நடிப்பது எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. இந்தப் படம் ஆரம்பித்த போது, நான் ஆண் போல் நடிக்க வேண்டும் என்றார்,.அதற்காக நான் சில பயிற்சிகளை மேற்கொண்டேன். ஆண்களின் உடல் மொழிகளைப் பார்த்து கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையைச் சொல்லும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

நாயகி அப்சரா, “இங்கு இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு, தமிழில் இந்தப் படம் வெளியாவது மிக மகிழ்ச்சி. காதல் காதல்தான் மூலம் நான் இங்கு அறிமுகமாவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இங்கு நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். படம் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றியது. இது நம் சமூகத்தில் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா சாரின் தெளிவான பார்வை என்னை வியக்க வைத்தது. ஓரின சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் கடவுளின் குழந்தைகள் தான். இது ஒரு கமர்ஷியல் படம், இதில் இரண்டு பெண்களுக்கு இடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹீரோயின்களுக்கிடையே ‘டூயட் சாங்’ இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா, “இந்தப் படத்தின் ஐடியா எனக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம். ஓரின சேர்க்கையாளர்களை நாம் பரிதாபமாக தான் பார்க்கிறோம். அரசாங்கமே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை. ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது. அதை மாற்றலாம் என்று தான் இதை எழுதினேன். இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்குச் செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது, அவர்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இக்கதையை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம். முதலில் நைனா கங்குலி இதற்கு தயங்கினார். அவருக்கு ஐடியா பிடித்திருந்தது. ஆனாலும் தயக்கம் இருந்தது. அதன் பிறகு ஒப்புக் கொண்டார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹீரோயின்களை வைத்து டூயட் பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின் தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது” என்றார்.

இப்படத்தில் நைனா கங்குலி, அப்சரா இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராஜ்பால் யாதவ், காஸி, மிதுன் புரந்தாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

>> எழுத்து இயக்கம் – ராம் கோபால் வர்மா
>> ஒளிப்பதிவு – மல்ஹர்பத் ஜோஷி
>> படத்தொகுப்பு – கமல் ரமடுகு
>> பாடல்கள் – பிரவீன் பால்
>> பின்ணனி இசை – ஆனந்த்
>> கலை இயக்கம் – மதுகர் தேவாரா
>> தயாரிப்பு – Artsee Media / Rimpy Arts International

இப்படத்தை, குருபரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகின்றனர். ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.