
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையைக் கிளப்பித் திரையரங்கப் பதாகையைக் கிழித்துப் போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்முறையான கண்டிக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.
சர்கார் திரைப்படம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபணையின்றி வெளிவந்த வேலையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லிப் போராடுவது சட்டவிரோதச் செயலாகும்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பியடிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதைத் தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “வீட்டுக்குள் புருஷங்காரன் பொண்டாட்டிய அடிக்கத் திண்னையில் கிடக்கிறவன் தேம்பித் தேம்பி அழுதானாம்”. அதுபோல படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப வசனங்களும், நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் ஓர் இயக்குநர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, அ.தி.மு.க.வினர் கொதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?
அவர்களின் அரசியல் அடாவடியெல்லாம் திரைப்படங்கள் வழி தெரிந்து விடுகிறதே என்றா?
சர்கார் திரைப்படம், ஒட்டு மொத்த இன்றைய அரசியலைத் தோலுரித்துக் காட்டி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழிப்புணர்வை ஏன் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள் என்று அ.தி.மு.க. அராஜகம் செய்கிறதா?
இவ்வாறு செய்வீர்களேயானால் இன்னும் இது போல் இன்னும் ஆயிரமாயிரம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். அதை யாரும் தடுக்க முடியாது. போலி அரசியலின் முகமூடி இதுபோன்ற படங்களில் வழியாகத்தான் கிழிந்து தொங்கும். அதை மக்களும் விரும்புவார்கள்!
சட்டப்படியாகத் தணிக்கைபெற்ற இத்திரைப்படத்தை அரசியல் சூழ்ச்சிகளால் தடுக்க நினைப்பது; வசனங்கள், காட்சிகளை நீக்கச் சொல்லது கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான செயல்பாடாகும்.
இச்செயலை வன்முறையாகக் கண்டிக்கிறேன். இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் ஒட்டுமொத்தத் திரைப்படத்துறையும் இணைந்து பெரும் போராட்டத்தைத் தொடங்குவோம்!
– கருணாஸ்