Shadow

கொலை திரைப்படம் – மிஷ்கினுக்கு ட்ரிப்யூட்

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், லோட்டஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K. குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கொலை’ ஆகும்.

“லைலாவைக் கொன்றது யார்?” எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் கடந்த 2 நாட்களாக டிரெண்டிங் ஆகி வருகிறது. ‘கொலை’ படத்தில் இடம் பெறும் சம்பவம் குறித்து பரவும் இந்தச் செய்தி திரைப்பட ஆர்வம் இல்லாப் பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. வித்தியாசமான இந்த மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலைத் தூண்டிய இந்தப் படத்தின் டிரெய்லர், நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வினில் பேசிய தனஞ்செயன், “இந்தப் படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார்தான். இயக்குநர் பாலாஜி மிகவும் திறமையான நபர். அவருக்கு பல நுட்பங்கள் தெரியும். அவருடன் பணி புரிந்தது பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் இந்தத் திரைப்படத்தை நேர்த்தியாகச் செதுக்கியுள்ளார். படத்தின் முடிவு எப்படி வரும் என்பதை ரகசியமாய் வைத்து, சிறப்பாக உருவாக்கி கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பாராட்டப்படும். இந்தப் படம் இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு ட்ரிப்யூட்டாக இருக்கும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன், “இந்தப் படத்தில் நான் பணிபுரிந்தது எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தை கொரோனா காலத்தில் நம்பிக்கை வைத்துத் துவங்கினார்கள். இந்தப் படத்தின் கதை புது மாதிரியாக இருக்கும். முதல்முறை பார்க்கும்போது ஒருவிதமாகவும், இரண்டாவது முறை பார்க்கும் போது வேறு அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தில் என்னுடன் பயணித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், என் உதவியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், “இயக்குநரிடம் இந்த ஸ்கிரிப்டை நான் பல முறை கேட்டிருக்கிறேன். அவர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்குத் திரைப்படங்கள்தான் எல்லாமே. இந்தப் படத்தின் இசையில் ஒரு புதுவித ஒலியை இசையைக் கொடுக்க முயற்சித்து இருக்கிறோம். இந்தப் படத்தின் ரீ-ரெக்கார்டிங் 6 மாத காலம் எடுத்துக் கொண்டது” என்றார்.

நாயகி மீனாட்சி சௌத்ரி, “இந்தப் படம் ஒரு பெரிய பயணம். இந்தப் படம்தான் எனது முதல் தமிழ்ப் படம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்ததே எனக்குப் பெரிய மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

நாயகி ரித்திகா சிங், “இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, நான் கதைக்குள் ஆழமாகப் போய்விட்டேன். கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள நானும் விரும்பினேன். இந்தப் படத்தில் பலர் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர், அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரமாக் இருக்கும்” என்றார்.

இயக்குநர் பாலாஜி K. குமார், “இத்தருணத்திற்காகத்தான் நாங்கள் பல வருடங்கள் காத்திருந்தோம். இந்தப் படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும், விஜய் ஆண்டனியும்தான். இந்தக் கதையை விஜய் ஆண்டனியிடம் நான் கூறியபோது, அவர் கதைக்குள் மூழ்கிவிட்டார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். அவர் எளிதில் ஒப்புக் கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள்தான் இந்தப் படம் இவ்வளவு தூரம் உருவாகக் காரணம். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் பலம். அவர்கள் இந்தப் படம் நன்றாய் வருவதற்கு கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் உழைத்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்தப் படம் சிறப்பாக வந்திருக்காது. அனைவரும் ரசிக்கும்படியான இரண்டாவது தடவை பார்க்கும்படியான படைப்பாக இது இருக்கும்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின், “இயக்குநர் பாலாஜி கே.குமார், சினிமாவின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞர். அவர் சினிமாவை ஒரு பாடமாகக் கற்றுக் கொண்டவர். கொலை, மனிதர்களுடன் எப்போதும் நெருக்கமான ஒன்று. இந்தப் படத்தின் ட்ரைலர் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. படத்தின் இசை ரசிக்கும்படி இருக்கிறது. படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி, “இந்தப் படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விஷயம். இந்தப் படம் இயக்குநர் பாலாஜியின் கனவு. நான் உறுதியாகத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன். இந்தப் படம் உலகத் தரமிக்க சிறந்த படமாக இருக்கும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்தப் படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்கிறார்.

ஒரு இசையமைப்பாளராக, இந்தப் படத்தின் இசையமைப்பாளர் உடைய பணி எனக்கு உலகத் தரமாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளர் இந்தப் படத்தின் கதையைப் புரிந்து, அதைத் தொகுத்துள்ளார். இந்தப் படத்தில் CG கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா பெரிய பணியைச் செய்துள்ளார். அது பேசப்படும். ரித்திகா, மீனாட்சியுடன் பணி புரிந்தது பெரிய சந்தோசம். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

>> எழுத்து, இயக்கம் – பாலாஜி K.குமார்
>> பேனர் – Infiniti Film Ventures & Lotus Pictures
>> தயாரிப்பு – கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப்.P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & RVS அசோக் குமார்,
>> ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன்
>> இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
>> படத்தொகுப்பு – செல்வா R.K.
>> கலை – K.ஆறுசாமி
>> VFX மேற்பார்வை – ரமேஷ் ஆச்சார்யா
>> ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம்
>> மறுபதிவு கலவை – A.M.ரஹ்மத்துல்லா
>> ஆடை வடிவமைப்பு – ஷிமோனா ஸ்டாலின்
>> சண்டை – மகேஷ் மேத்யூ
>> நடனம் – சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா
>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா (D’One)