
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்தத் திரைப்படம், எளிமையையும் நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாகத் தயாரித்துள்ளார் ஜெய்கிரண். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர் ஜெய்கிரண், “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாகக் கேட்டவுடனே என் நெஞ்சைத் தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு படமாக இது உருவாகும் என நம்புகிறேன். பாலா, ஷெரீஃப் மற்றும் மற்ற திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்ளுகிறேன். சினிமாவுக்கு மக்களைத் தூண்டும் சக்தி உண்டு. இந்தப் படத்துக்கு அந்தத் தீப்பொறி இருக்கிறது” என்றார்.
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நகைச்சுவை நேர்த்திக்காக அறியப்படும் KPY பாலா, இப்போதும் ‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம், ஒரு ஆழமான உணர்ச்சி கொண்ட கதாநாயகனாகத் திரையில் அறிமுகமாகிறார். ரணம் படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரீஃப் இப்படத்தை இயக்குகிறார். உண்மைக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்தப் புதிய படம், ஓர் உணர்வுப்பூர்வமான குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இயக்குநர் ஷெரீஃப், “ரணம் போன்ற ஒரு கதைக்குப் பிறகு, மனதிற்கு நெருக்கமான, வாழ்க்கையைப் பற்றிய படத்தை இயக்க விரும்பினேன். ‘காந்தி கண்ணாடி’ எனக்கு மிக நெருக்கமான படம். தயாரிப்பாளர் ஜெய்கிரண், கதையைக் கேட்டவுடனே ‘ஆம்’ என்ற பதில் சொல்லியது எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தது.
இது பாலா ஹீரோவாகும் முக்கியமான படமுமாகும். மேலும் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா மேடம் போன்ற முக்கிய கலைஞர்கள் இருப்பது, படத்திற்கு மேலும் ஆழம் சேர்க்கிறது. ஈடுபாட்டுடன் உழைக்கும் எங்கள் குழு, ஒரு அர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது” என்றார்.
தொழில்நுட்பக் குழு:-
இசை – விவேக் மற்றும் மெர்வின் (பட்டாஸ், சுல்தான்)
ஒளிப்பதிவு – பாலாஜி கே. ராஜா
படத்தொகுப்பு – சிவனந்தீஸ்வர் (தீரன் அதிகாரம் ஒன்று, வடக்குப்பட்டி ராமசாமி)
கலை – மணிமொழியன் ராமதுரை
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – உதயகுமார் பாலாஜி
தலைப்பு வடிவமைப்பு – தினேஷ் அசோக்
ஆடை வடிவமைப்பாளர்கள் – பிரியா ஹரி மற்றும் பிரியா காரன்
மக்கள் தொடர்பு – ரேகா

