Shadow

“மாநாடு: இரண்டாவது தேசிய விருது நிச்சயம்” – இயக்குநர் வெங்கட் பிரபு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, “இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்தப் படத்தை ஃப்ரெஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார். இந்தப் படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் என்.ஜி.கே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன் பிறகுதான் டைம் லூப்புக்குக் கதையை மாற்றினோம். இடையில் கோவிட் காரணமாக இந்தப் படத்தை அப்படியே வைத்துவிட்டு, இதே சிம்பு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை வைத்து சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன். சிம்புவும் அதற்கு ஓகே சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அந்தக் கதை பிடித்திருந்தாலும், ‘மாநாடு படத்திலிருந்து நான் டைவர்ட் ஆக வேண்டாம் முதலில் அந்த படத்தை முடிப்போம்’ என உறுதியாக நின்றார்.

இந்தப் படம், 80 நாள் திட்டமிட்டு 68 நாட்களில் முடிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் தான். சிக்கலான இந்தக் கதையை எல்லோருமே எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக படத்தொகுப்பு செய்த பிரவீனுக்கு இரண்டாவது முறையாகத் தேசிய விருதை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது. அதில், ‘மாஷா அல்லா’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி முதலில் அந்தப் பாடலை எழுதிப் படமாக்கியும் விட்டோம். அதன் பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும், ‘அந்தப் பாடலில் மாஷா அல்லா என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக இருக்காது’ எனக் கூறியதால் பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.

ப்ளூ சட்டை மாறனைத் தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது எனச் சொல்லிட்டாங்க. அவர் பெயரை வேற, என்னை இந்த இடத்தில் பயன்படுத்த வச்சுட்டாங்க. ஒரு காலத்துல என்னோட கம்பெனில படம் பண்ணுவதற்காக இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார் சுரேஷ் காமாட்சி. இன்னைக்கு அவரோட கம்பெனில நான் படம் இயக்கியிருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்” என்று கூறினார்.