Shadow

“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்தப் படத்தை முதல் முறை மொத்தமாக ரசித்துப் பார்த்தேன் என்றால், இரண்டாவது முறை பார்க்கும்போது பின்னணி இசை என்னை மிரட்டி விட்டது. அந்தவகையில் யுவன் ஷங்கர் ராஜாவை ‘இசைஞானி இளையராஜாவின் 2K வெர்ஷன்’ என்றுதான் நான் சொல்வேன்..

சிம்புவுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்தப் படத்தைஹ்ட் தயாரித்துள்ளார். இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் ஏதோ படப்பிடிப்பில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.. ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும். வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது” என்று பேசினார்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், “சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன். கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை, இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு ப்ரோமோஷன் கொடுத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நான் நடித்து வந்தாலும், மாநாடு படத்தைப் பார்த்துவிட்டு பலரும், ‘இவ்வளவு நல்லா நடிக்கிறீர்களே!’ என்று கேட்கிறார்கள்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சி போல, திருவிளையாடலில் தருமி வரும் காட்சி போல, இந்தப் படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நான் இணைந்து நடித்த காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட முரட்டுக்காளை படத்தில் நடித்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது போல எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவே ஃபோன் செய்து, “பின்னிட்ட” என்று பாராட்டியது எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது” என்று கூறினார்.