Search

நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022

சர்வதேச நரம்பியல் மனநலமருத்துவக் கூட்டமைப்புடன் (INA) இணைந்து புத்தி க்ளினிக் & அப்போலோ மருத்துவமனை, நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, கோவிட் காலத்திற்குப் பிறகு மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஓர் அலை போல் அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான புதியமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் உலகிற்கு எழுந்துள்ளது. இந்தக் கருத்துக்களம், மூளை மற்றும் மனதின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

நரம்பியல் மருத்துவத்தையும், மனநல மருத்துவத்தையும் இருவேறு மருத்துவப் பிரிவுகளாக நினைத்துக் கொள்கின்றோம். ஆனால், மருத்துவர்களுக்கும், பொது சுகாதாரத்தில் ஈடுபட்டுள்ளோர்களுக்கும், இவ்விரண்டு மருத்துவமும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தது இல்லை என்றும், இவ்விரண்டிற்கும் இடையே பரவலான ஓர் இடைத்தளம் உள்ளது என்பதையும் நன்கறிவார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டில், ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவர்களும், கருத்துருவாக்க தலைவர்களும், நரம்பியல் மருத்துவமும், மனநல மருத்துவமும் தனித்துவமான பிரிவுகள் என்று கருதவில்லை. எடுத்துக்காட்டிற்கு, ஐரோப்பிய நரம்பியல் வல்லுநர்கள் நடத்தையில் (Behaviour) ஏற்படும் மாற்றங்களை கைகால் வலிப்பு நோயின் சமரே (Epilepsy equivalent) என்றே விவரித்தனர். நரம்பியல் வல்லுநராகத் தன் தொழிலைத் தொடங்கிய சிக்மண்ட் பிராய்டு, உணர்ச்சிபூர்வ அறிகுறிகுறிகளின் உளப்பகுப்பாய்வை (Psychoanalytic theory of emotional symptoms) மேற்கொண்டார். அது காலப்போக்கில், நரம்பியலையும், மனநலவியலையும் பிளவுப்படுத்தியது. நரம்பறிவியலின் (Neuroscience) வருகையாலும், அது, உயிரியல் அறிவியலுடனும், மருந்தியலுடனும் சேர்ந்ததாலும், நரம்பியலும் மனநலவியலும் மீண்டும் ஒன்று சேரத் தொடங்கியது. மருந்துகளின் வளர்ச்சி, மூளை உருவரைவு (Brain Imaging), மரபணுவியல் (Genetics), மூலக்கூறு உயிரியல் (Molecular Biology), நோயெதிர்ப்பியல் (Immunology) ஆகிய பிரிவுகளின் அறிவியல் உதவியால், தற்போது, நோயுற்ற மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது. இன்று, நரம்பியலுக்கும் மனநலவியலுக்கும் இடையே, மருத்துவப் பராமரிப்பில், விஞ்ஞானத்தில், பொது சுகாதாரத்தில் ஒரு பரவலான இடைத்தளம் (Interface) உருவாகியுள்ளது.

Indian Academy of Neurology இன் தலைவர் பேராசிரியர் ககன்தீப் சிங், “முன் எப்பொழுதையும் விட நரம்பியலுக்கும் மனநலவியலுக்கும் இடையேயான பந்தமும் இடைத்தளமும் உறுதியாக அமைந்துள்ளது. அறிவாற்றல், நடத்தை (Behavioural), மாற்றுத்திறன் (Disability) குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவத்தின் பல்துறை பிரிவுகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. அதற்கான விவாதங்களையும் ஆலோசனைகளையும் முன்னெடுக்கும் வாய்ப்பினை, INA-வுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வட்டமேசை நிகழ்வு வழங்கியுள்ளது” என்றார்.

புத்தி க்ளினிக்கின் நிறுவனரும், அப்போலா மருத்துவனையின் நரம்பியல் பிரிவின் மூத்த ஆலோசகருமான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்தி, “மருத்துவத்திலும் பொது சுகாதாரத்திலும், நரம்பியல்நசிவு ஒழுங்கின்மைகளின் (Neurodegenerative disorders) தாக்கம் முதியவர்களிடம் அதிகமாகியுள்ளது. இத்தகைய தாக்கத்தின் விளைவு, நரம்பியலிலும் மனநலவியலிலும் மட்டுமில்லாமல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்ற கூட்டுநோய்களிலும் ஏற்படுகிறது. எலும்புசார் நோய், இதயநோய், சுவாசப்பிரச்சனை, இரைப்பை குடல் நோய், சிறுநீரக நோய் முதலிய கூட்டுநோய்களாலும் பாதிக்கப்படுவதால், மருத்துவத்தின் பல்துறை பிரிவுகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. இங்கே தான், பல்வேறுபட்ட சிகிச்சை முறைகளும், மறுசீரமைப்பும் (rehabilitation), புத்தி க்ளினிக்கில் பின்பற்றப்படும் நவீன விஞ்ஞானத்துடன் பாரம்பரியமான மருத்துவமுறைகளின் இணைப்பும் அவசியமாகிறது. இத்தகைய முழுமையான அணுகுமுறை, நரம்பியல் மனநலமருத்துவம், முதியவர்கள் பராமரிப்பு, நாட்பட்ட நோய் மேலாண்மை ஆகியவற்றிலும் காண விரும்புகின்றோம். ஆகவே, ஆசியாவின் முதன்மையான சுகாதார சேவை நிறுவனமான அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, இந்நிகழ்வை வழங்குகின்றோம்” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின், மருத்துவச் சேவைகளுக்கான மருத்துவப் பிரிவு செய்றபாடுகளின் மூத்த துணை தலைவரான (Senior Vice President- Medical Service for Hospital Division- Operations) மருத்துவர் ரோகிணி ஸ்ரீதர், “நரம்பியல், மனநல மருத்துவம், புனர்வாழ்வு (rehabilitation) ஆகிய துறையைச் சேர்ந்த அப்போலோ மருத்துவமனை வல்லுநர்கள் பலர், மனநலமருத்துவ வட்டமேசை 2022-இல் பங்கேற்கின்றனர். மருத்துவத் தேவைகளை அணுகும் முழுமையான பராமரிப்புக்கான புது திட்ட முன்மாதிரிகளைப் பிரதானப்படுத்தும் நிகழ்வினைக் குறித்து உற்சாகத்துடன் உள்ளோம்” என்றார்.

நரம்பியல் மனநலமருத்துவப் பிரிவு வல்லுநர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் அப்பிரிவின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள, நியூ சவுத் வேலஸ் பல்கலைக்கழகத்தின், குழுந்தை மனநலத்துறையின் பேராசிரியரும், INA-வின் எதிர்வரும் தலைவருமான வலசம்மா ஏப்பன் (Valsamma Eapen), நரம்பியல் வளர்ச்சி குறைப்பாடுகள் பற்றியும், அவை ஏற்படுத்தும் வாழ்நாள் பாதிப்புகள் பற்றியும் பேசினார். ஆட்டிசம் குறித்தான ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அவர், பாதிக்கப்பட்டோர்களுக்கான பிரத்தியேகமான வாழ்நாள் பராமரிப்பைக் குறித்தும், மறுசீரமைவுக்கான சேவைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார். ஜெர்மனி, Freiburg பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மனநலமருத்துவத்தின் பேராசிரியரான Ludger T van Elst, ஆட்டோ இம்யூன் நோயறிதல் (Autoimmune diagnosis) எப்படி நாட்பட்ட மனநல பிரச்சனைகளான மனைச்சிதைவு நோய் (Schizophrenia) முதலியவற்றின் போக்கை மாற்றுகிறது எனக் கூறினார். ஆட்டோ இம்யூன் குறைப்பாடுடையவர்களுக்கும், நரம்பியல் மனநலமருத்துவ அறிகுறிகள் உடைய பல நோயாளிகளுக்கும், எப்படி பல்துறை மருத்துவ அணுகுமுறை சிகிச்சைக்கு உதவுகின்றது என விளக்கினார். கோவிட் தொற்றும், நரம்பியல் மனநலமருத்துவ அறிகுறியும், மனநலம் மற்றும் நரம்பியல்குறைப்பாடுகளின் அடையாளம் என்றவர், அவை, கிருமித்தொற்றாலும், ஆட்டோ இம்யூனின் மாற்றத்தாலுமே ஏற்படுகிறது என்றார். இவற்றைச் சுட்டிக்காடி, நரம்பியல், மனநலவியல், மறுசீரமைப்பு (rehabilitation) ஆகிய துறை வல்லுநர்களின் ஒருங்கிணைந்த பகுத்தாய்வு மற்றும் சிகிச்சைக்கான தேவையை வலியுறுத்திக் கூறினார்.