
மூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
“ப்ரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள்” என்றார் நாயகி பார்வதி.
“தமிழில் ‘நிமிர்’ எனது 3வது படம். இந்த படத்தில் எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் ப்ரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் எனச் சொன்னதை யாரும் நம்பவில்லை” என்றார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத். “ப்ரியதர்ஷன் சாருடன் நான் வேலை செய்யும் 4வது படம். விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் இருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். ப்ரியதர்ஷன் சாரின் ‘ஒப்பம்’ படத்தை விட இன்னும் சிறப்பாக ஒளிப்பதிவு இருக்கணும்னு உழைச்சிருக்கோம். உதயநிதியின் தோற்றத்தைக் கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறோம். அனைவருக்கும் இந்தத் தோற்றம் பிடிக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்.
“படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், நிமிர் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்குப் பெருமை. தெறி படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரகனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்த படத்தில் தான். கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரகனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன்” என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
“இந்தப் படத்துக்கு 10 நடிகர்கள் பெயரைப் பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே, ‘உதயநிதி எப்படி இருப்பார்?’ என்று கேட்டார். கூடவே நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுதச் சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரைப் போட்டிருக்கிறார். பாலச்சந்தர் மறைவிற்குப் பிறகு இன்னொரு குருநாதர் எனக்குக் கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்” என்றார் சமுத்திரகனி.
36 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ள இயக்குநர் ப்ரியதர்ஷனுக்கு, நிமிர் படம் தமிழில் அவர் இயக்கும் ஏழாவது படமென்பது குறிப்பிடத்தக்கது.