
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ’கடைசி விவசாயி’ என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் நற்காரியம் சிலிர்ப்பை ஏற்படுத்தும்வண்ணம் உள்ளது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அச்செயல் இன்னும் பல்கிப் பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
இது எப்படி சாத்தியமானது?
அவரது பெயர் இ.பா.வீரராகவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ஆம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸாப் குழுக்கள் மூலம் தனது சின்ன சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். 2019 வரை அப்படி அவரால் வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,345 ஐத் தொடுகிறது.
இத்தகவலை அறிந்த சன் டி.வி, சமூகச் செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் ’நம்ம ஊரு ஹீரோ’ நிகழ்ச்சியில் அவரைச் சிறப்பித்து கெளரவித்தது. அந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியது விஜய் சேதுபதி.
’’நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சாரை தற்செயலாகச் சந்தித்தது, என் வாழ்வில் நடந்த அற்புதம் என்றே சொல்வேன். பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத நான், அப்போது மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு பகுதிநேர சமூகச் சேவையாகவே அதைச் செய்து வந்தேன்.
அந்நிகழ்ச்சியின் போதும் அது முடிந்த பிறகும் என்னிடம் மிகவும் அக்கறையாகப் பேசிய விஜய் சேதுபதி சார், ‘நீங்க செய்ற இந்தச் சேவையை முழு நேரமாகத் தொடர என்னால முடிஞ்ச எல்லா உதவிகளையும் செய்றேன்’ என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார். அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மந்திரச் சொற்கள் மாதிரியே பட்டது. அவர் வார்த்தைகளை நம்பி, உடனே என் வேலையை ராஜினாமா செஞ்சேன்.
அந்த நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி மார்ச் மாதம் 2019 ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டின் பல பகுதியில் இருந்து, வேலை அளிக்கும் நிறுவனங்கள்கிட்ட இருந்து, வேலை தேடுபவர்களிடமிருந்து அழைப்புகள் தொலைபேசி & வாட்சப் மூலமாகவும் அதிக அளவில் வந்து சேர்ந்தது. அந்தத் தகவலை சார் கிட்ட சொன்னபிறகு பயங்கர உற்சாகமாகிட்டார். அதற்குத்தானே ஆசைப்பட்டார் விஜய் சேதுபதி? உடனே புதுச்சேரி தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து இந்தச் சேவையை விரிவாகச் செய்வதற்கான அறங்காவலர் மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்து ஒருங்கிணைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனமாக செயல்பட உதவினார். உதவினார் என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. எனக்கும் என்னைச் சார்ந்த ஊழியர்கள் அத்தனை பேருக்கும் சரியான தேதியில் சம்பளப் பட்டுவாடா செய்துகொண்டே இருந்தார்.
சாரோட ஸ்ட்ராங்கான சப்போர்ட்டால, 14 மார்ச் 2019 இல் புதுச்சேரியில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் – அலுவலகம், என்னை நிறுவனர் & நிர்வாக அறங்காவலராகக் கொண்டு செயல்படத்துவங்கிச்சு.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு & புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் இருந்து சிறு, குறு, பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மனிதவள தேவை விபரங்களை அளித்து அதனை வேலை தேடும் நபர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார். அந்த வேலைவாய்ப்பு தகவல்களை வாட்சப் & YOUTUBE மூலம் கொண்டு சேர்த்ததன் பயனாகப் பல்வேறு பகுதியில் உள்ள நபர்களிடமிருந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் அதிக அளவின் வரத் துவங்கியது. அந்த சேவை முற்றிலும் கட்டணமின்றி கிடைக்கப்பெற்றதால் இரு தரப்பினரும் பயனடைந்தனர்.
இன்னொரு பக்கம், இந்தச் சேவை மூலம் பயன்பெற்ற நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி, மனித வள குழுக்களில் (HR FORUM) பகிரத் துவங்கினர். அதன் பயனாக தமிழ்நாடு & புதுச்சேரியில் உள்ள பல HR FORUM களில் இருந்து அழைப்பும் வந்தது. எங்கள் சேவையும், பலருக்குப் பயனடைய வாய்ப்பாக அமைந்தது. இதன் அடிப்படையில் தினம்தோறும் அதிக எண்ணிக்கையிலான வேலை தேடும் நபர்களுக்கும் பயனடைந்தனர்.
தொடர்ந்து மார்ச் 20 – 2022 வரையில் நிறுவனங்களில் இருந்து தினம்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1,00,133 படித்த தகுதியான நபர்கள் வேலை பெற்றுப் பயனடைந்து உள்ளனர். தற்போதைய தகவல்களின் அடைப்படையில், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மற்றும் YOUTUBE [VVVSI CAREER GUIDELINES] சேனல் வாயிலாகப் பின்பற்றி வருகின்றனர்.
மேலும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கமானது இதனுடன் சேர்த்து, தினமும் அரசு வேலை வாய்ப்பு தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும், அரசு வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டுதல்களை அளிப்பது, அரசின் சுயதொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து சுயதொழில் முனைவோரை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்து 73 சுயதொழில் முனைவோர்களை உருவாக்கியும் உள்ளது மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு & வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளது. இத்துடன் 17 வேலைவாய்ப்பு முகாம்களைத் தனியாகவும், 3 முகாம்களை அரசுடன் இணைந்தும் நடத்தி உள்ளது. முதலில் பாண்டிச்சேரியில் துவங்கப்பட்ட சத்மில்லாத இந்த யுத்தம் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களை, குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
நீங்களோ உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ வேலை தேடும் பட்சத்தில் https://www.vvvsi.com இணைய தளத்தில் பதிவு செய்து வாட்சப் லிங்க்-ஐப் பெற்று வேலை வாய்ப்பு தகவல்களைத் தினமும் பெறலாம். வேலை கொடுக்கும் நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் info@vvvsi.com மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு தகவல்களைத் தெரிவிக்கலாம்.
இந்தச் சேவை வாயிலாக வேலை தேடும் நபர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமும் பயனடைய தொடர்ந்து முழு உதவி செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கும், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தன்னார்வலர்கள், மனிதவள வட்டார அமைப்புகள் (HR FORUM) அனைவரும் தங்களின் நன்றியை உரித்தாக்குகின்றனர். இந்தப் பத்திரிகைச் செய்தியை, விஜய் சேதுபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலே அளிக்கின்றேன். இந்தத் தகவலை வெளிய சொல்ல முயற்சித்தபோதெல்லாம் ரொம்பக் கண்டிப்பான முறையில என்னைத் தடுத்துட்டே இருந்தார். இந்த முறை, அவர் கோவித்துக் கொண்டாடாலும் பரவாயில்லை. அவரோட மனசு எவ்வளவு பெருசுன்னு, தான் சம்பாதிக்கிற செல்வம் அத்தனையும் மக்களுக்குத்தான்னு நினைக்கிறதாலதான் அவருக்கு மக்கள் செல்வன்னு பொருத்தமா பேரு வச்சிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியட்டும்“ என்று உணர்ச்சி ததும்பச் சொன்னார் வீரராகவன்.