Shadow

பொய்க்கால் குதிரை – ஆக்ஷன் த்ரில்லர்

‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பொய்க்கால் குதிரை”.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. நடனப்புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்க்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனப்புயல் பிரபுதேவா, இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் வினோத்குமார், ”இயக்குநர் சந்தோஷ் இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’ ஒரு த்ரில்லர் திரைப்படம். சந்தோஷ் குமார் என்னைச் சந்தித்து பிரபுதேவாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவின் ரசிகன். அவர் நடிப்பில் வெளியான ‘முக்காலா முக்காபுலா..’ என்ற பாடலை என்னுடைய சொந்த ஊரில் வருடம் முழுவதும் ஒலிக்க வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர் வட்டாரத்தில் அனைவரிடமும், ‘பிரபுதேவா அனைவரும் ரசிப்பது போல் ஒரு நடனக் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் திறமையை நிரூபிப்பார்’ எனச் சொல்வேன். அது இந்தப் படத்தில் நடைபெற்றிருக்கிறது. ஒற்றைக் காலுடன் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார், ”நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரைச் சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். நடிகர் ஆர்யா தான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார். மேலும் இந்தப் படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம். பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தவை எல்லாம் இல்லாமல், புதிய பாதையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பிரபுதேவா உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், ” இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு பிறகு கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினேன். ‘யூ’ சர்டிபிகேட் படமான அந்தப் படம் ஒரு ரீமேக் படம் என்பதால், எனக்கான அடையாளம் கிடைக்கவில்லை. அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னுடைய சூழல் என்னை திசை மாறி பயணிக்க வைத்து விட்டது. அதே தருணத்தில் நீண்ட காலமாக த்ரில்லர் ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது போன்ற வித்தியாசமான ஜானரில் படத்தை இயக்குவதற்காகத் தான் திரையுலகில் அறிமுகமானேன். இனிமேல் இயல்பான கதைகளை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

கஜினிகாந்த் படத்தில் எனக்குக் கிடைத்த ஒரு திரையுலக வழிகாட்டி, நண்பர் ஆர்யா. முன்பெல்லாம் தொடர்புகளுக்காக ‘யெல்லோ பேஜஸ்’ என்ற ஒரு பத்திரிக்கையை வைத்திருப்போம். என்னுடைய யெல்லா பேஜஸ் ஆர்யா தான். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரது முகவரியும் தொடர்பு எண்ணும் அவருடைய டைரியில் இருக்கும். பிரபுதேவாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன், ஆர்யா, இயக்குநர் ஏ. எல். விஜயைத் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஏ.எல். விஜய் மூலமாக பிரபுதேவாவைச் சந்தித்து, கதையை விவரித்தேன். கதையைக் கேட்டவுடன், ‘பிடித்திருக்கிறது. இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.

நிறைய தயாரிப்பாளர்கள் சந்தோஷ், அடல்ட் படத்தை தான் இயக்குவார் என்று என் மீது முத்திரை குத்தினார்கள். இந்தத் தருணத்தில் தான், ‘பிரபுதேவாவை வைத்து பொய்க்கால் குதிரை என்ற த்ரில்லர் ஜானரில் படத்தை இயக்குகிறேன்’ என்று வினோத்குமாரைத் தொடர்பு கொண்ட போது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாகப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டார். படத்தை இயக்குவதற்கு முழுச் சுதந்திரமும் அளித்தார்.

இமான் அவர்களிடம் வேறு ஒரு படத்திற்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நடைபெறவில்லை. அதன் பிறகு இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம். பாடல் எந்தச் சூழலில் இடம் பெறுகிறது என்பதனை ஒரு குறிப்பாக சொன்னால் போதும். அவர் அதனை உணர்ந்து, ஏராளமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைத்து, கவிதைகளாக்கிக் கொடுப்பார். அதிலிருந்து நாம் தேர்வு செய்வதுதான் கஷ்டமாக இருக்கும்.

‘பொய்க்கால் குதிரை’ படத்தைப் பற்றி நான் பேசுவதை விட, படம் நிறைய பேசும். நான் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்லவில்லை இயல்பாகப் படமெடுத்திருக்கிறேன். படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் பொய்க்கால் குதிரை எனும் திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.