ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் ப்ராவோலியன் எவென்ட்ஸ் (PRAAWOLION EVENTZ) சென்னையில் சமூக நல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். நடிகர் பிரபாகரன் PC, “ஃபேஷன் உலகைப் பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது” என்றார்.
ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் கருண் ராமன், “இது எங்களுக்கு ஒரு குடும்ப விழா போன்றது. இந்நேரத்தில் எங்களுடன் இணைந்த Naturals குமரவேலன் அவர்களுக்கு மிகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஃபேஷன் உலகின் மிகப்பெரும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இவ்விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. தீபிகா பிள்ளை, பந்தனா நெருலா ஆகிய இருவரும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் ஃபேஷன் உலகின் மிக முக்கிய விழாவாக இது இருக்கும்” என்றார்.
குமரவேல், “இவ்விழாவை சென்னையில் ஒருங்கினைக்கும் பிரபாகரனுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். கருண் ராமனுடன் மிக நீண்ட காலமாக பழகி வருகிறேன். இந்தத் துறையில் வெளியில் இருந்து மிக எளிதாகக் குறை கூறி விடலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல்களும் உழைப்பும் மிக மிகக் கடினமானது. அதை நேரில் கண்ட பிறகு நானும் இதில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன். மேலும் விவசாயிகளுக்கு உதவுவது பெருமையான ஒன்று. தீபிகா மற்றும் பந்தனா போன்றவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஃபேஷன் உலகில் சென்னை தற்போது வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இவ்விழா அதில் முன்மாதிரியாக இருக்கும்” என்றார்.
ஃபேஷன் டிசைனர் பந்தனா நெருலா, “தற்போது தான் இவ்விழாவின் நோக்கம் பற்றி அறிந்தேன் இப்படியான விழாவில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன். சென்னை ஃபேஷன் உலகில் பின்னே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட விழாக்கள் நடப்பது அந்தப் பெயரை மாற்றுவதாக இருக்கும்” என்றார்.
டிசைனர் தீபிகா பிள்ளை, ”சிறு இடைவேளைக்குப் பிறகு ஃபேஷன் உலகிற்கு வருகிறேன். இந்த விழா என் திறமைக்கு தீனி தருமென நம்புகிறேன். பல புதிய டிசைன்கள் இவ்விழாவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்விழா திறமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார்.