Shadow

“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கும் வருகை தந்திருந்தனர்.

தயாரிப்பாளர் பூஷன் குமார், “இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றித் தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படத்திற்காக ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்றார்.

தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா, “சந்தீப் ரெட்டி வங்கா இயல்பாகவே கடினமான சிந்தனைகளும் உள்ளமும் கொண்ட மனிதர். எனவே அவரது படங்கள் எப்போதுமே அடர்த்தி மிகுந்ததாகவே இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்களை உருவாக்குவதையே அவரும் விரும்புகிறார். அர்ஜூன் ரெட்டி படத்திற்காக எவ்வளவு கடுமையாக உழைத்தாரோ, அதே உழைப்பை இப்படத்திற்காகவும் கொடுத்திருக்கிறார். இதுவரை திரையில் நீங்கள் பார்த்த ரன்பீருக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தில் பார்க்க இருக்கும் ரன்பீருக்கும் தொடர்பே இருக்காது. அவரைப் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீனில் 18 நிமிட சண்டைக்காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த சண்டைக் காட்சியில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்த சண்டைக் காட்சியைக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம். இப்படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல காண் அனுபவமாக இருக்கும்” என்றார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர், ”இது என்னுடைய முதல் இந்திப் படம். ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலை பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இது போன்ற இயக்குநர்களுடன் வேலை பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை வந்தது. ‘தள்ளுமாலா’ என்கின்ற மலையாளப் படத்தில் என்னுடைய சண்டைக் காட்சி வடிவமைப்பைப் பார்த்து விட்டு என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் மற்றும் பாபி சாரை வைத்து ட்ரெயினிங் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்றுக் கொண்டு செய்து கொடுத்தார்கள். மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த ரன்பீர் சார் மற்றும் பாபி சாருக்கு நன்றி. முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரொடெக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் மிகவும் உதவியாக இருந்தார். இப்படத்தில் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப் படத்தை மிக வித்தியாசமான முறையில் உருவாக்கி இருக்கிறார்” என்றார்.

புரொடெக்ஷன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன், “முதன் முதலில் கதை கேட்கும் போது எனக்கு நிறைய சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்த மிகவும் உணர்வுபூர்வமான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. படத்தில் வரும் மிஷுன் கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உண்மையாகவே உருவாக்கினோம். ட்ரெய்லர் பார்த்து சிஜி-யா என என் நண்பர்களே கேட்டார்கள். முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்தக் கேள்வி சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும்” என்றார்.

திரைப்பட விநியோகஸ்தர் திரு. முகேஷ் மேத்தா, “அர்ஜூன் ரெட்டி படம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப் படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். துருவ் விக்ரமை அறிமுகம் செய்தோம். இந்தப் படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. பார்க்கும் போது இதுவொரு தமிழ்ப்படம் என்கின்ற உணர்வைக் கொடுப்பது போல் மிகச் சிறப்பாக டப்பிங் பணிகளைச் செய்திருக்கிறார்கள்” என்றார்.

ராஷ்மிகா மந்தனா, “இந்தப் படத்தில் நடித்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகளைத் தேடிப் போவதில்லை. வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன். அவ்வளவு தான், இந்தப் படம் மிகவும் இன்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இன்டஸ்ட்ரிக்குப் பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இப்படத்தின் கீதாஞ்சலி கேரக்டர் தான். எந்த ஒப்பனையும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது” என்றார்.

நடிகர் பாபி தியோல், “நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர் கபூர். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும். அந்த வகையான படம் இது. இந்தப் படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு சந்தீப்க்கு என் நன்றிகள். இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை. கதை மிக உணர்வுபூர்வமாக இருக்கும். திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் மிக தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிஜி இல்லை. எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிகக் கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு விலங்குகள் சண்டை போட்டுக் கொள்வது போல் இருக்கும்” என்றார்.

நடிகர் ரன்பீர் கபூர், “மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. என்னுடைய படப்பிடிப்பு சென்னையில் நடந்திருக்கிறது. எனக்குச் சென்னை ரொம்பவே பிடிக்கும். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை. இது ஒரிஜினல். ஆனால் மிக இன்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள். என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் சந்தீப்பும் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப் பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக் கதை, ஏன் இந்தக் கதை, என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான். அவனைக் கொண்டு செல்லும் அந்தப் புள்ளி எது என்பதுதான் இந்தப் படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். விலங்குகள் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும். இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை நீங்களும் உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் என்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம். அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி இருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.