Shadow

“ராயர் பரம்பரை” – முழு நீள நகைச்சுவைப் படம்

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத். T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை” ஆகும். மேலும் இப்படத்தில் கஸ்தூரி, K.R.விஜயா, R.N.R.மனோகர், பாவா லக்‌ஷ்மணன், சேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் கே. ராஜன், “இது ஒரு நல்ல படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறைய செலவு செய்திருக்கிறார்கள். இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்தச் சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லிம் பெண்ணைக் காப்பாற்ற இந்துக் கடவுளின் வேலைத் தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களைக் காட்டுங்கள். யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம். அதை இயக்குநரும் கலைஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா, “இந்தப் படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா எனக்கு நீண்ட நாள் நண்பன். அவரது முதல் படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன். அப்போதே நல்ல பழக்கம். இடையில் அவரைப் பார்க்கவில்லை, நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இன்று, இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது. படம், சுந்தர்.சி சாரின் காமெடி படம் போல இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி பெறும். மனோ பாலா சார் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நீங்கள் அனைவரும் உடலின் மீது அக்கறை கொண்டு நல்ல உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இயக்குநர் ராம்நாத்.T, “நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது. கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர் அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது. இந்தப் படத்தை நான் உருவாக்கக் காரணம், நான் கண்ட ஒரு உண்மைச் சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது. அது தான் இந்தப் படம் உருவாக காரணம்” என்றார்.

நடிகர் ஆனந்த்ராஜ், “மறைந்த நடிகர் மனோவிற்கு முதலில் என் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் சிறிய படம் இல்லை. ஒரு நல்ல பெரிய படம். தயாரிப்பாளர் படத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம். யாரையும் தாழ்த்திப் பேசாத ஒரு நல்ல படம். படத்தில் பல காமெடிக் கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். மக்களிடம் கொண்டு போய் இதை நீங்கள் தான் சேர்க்க வேண்டும்” என்றார் பத்திரிகையாளர்களிடம்.

தயாரிப்பாளர் சின்னசாமி, “நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்தப் படத்திற்குத் தேவையானதைச் செய்துள்ளேன்” என்றார்.

நடிகர் கிருஷ்ணா, “கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். ஃபுல் ஹ்யூமர் படம். நான் முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். இயக்குநர் கேப்டன் என்றாலும், கப்பல் சின்னசாமி சார் தான். அவருக்கு நன்றி. எல்லாப் படத்திற்கும் உங்கள் ஆதரவு இருந்துள்ளது. அதே போல் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நாயகி எல்லா ஜவுளிக்கடை ஃபோட்டோவிலும் இவர் படம் தான் இருக்கும். நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார்” என்றார்.