Shadow

நெஞ்சை நிமர்த்தாத சமுத்திரக்கனி – கோலி சோடா 2

Samuthirakani in Goli Soda 2

“விஜய் மில்டன் என்னை நடிக்கக் கூப்பிட்டார், யாரெல்லாம் நடிக்கிறாங்கன்னு கேட்டேன். சமுத்திரக்கனி மட்டும் தான் நடிக்கிறார், மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளைச் செய்பவர் சமுத்திரக்கனி. அவர் எனக்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்” என்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.

கோலி சோடா மாதிரி இது இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுனு நினைச்சி தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். கோலி சோடாவுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. கோலி சோடா படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதைப் பற்றி பேசியிருக்கிறோம். நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு, ‘பொண்டாட்டி’ பாடலைப் போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டைக்காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார். சமுத்திரக்கனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவரை ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.

விளம்பரம் செய்யும் செலவை விட்டு விட்டு, ஜிஎஸ்டி வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்கு தேவையான விஷயங்களைக் கொடுப்போம் என முடிவு செய்தோம். சென்னையில் சூர்யா அதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகிறது” என்றார் விஜய் மில்டன்.