

சஞ்சய் மேந்திரத்தா – இளம் வயதில், பிரபலான மாடலாக வலம் வந்தும், இயக்குநர் ரவி சோப்ராவின் கண்ணில் பட்டும், ஒரு நிரந்திர வேலைக்குப் போகும்படி கட்டளையிட்ட பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாவை விட்டு விலகினார். பின், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் புரிந்து, ஒரு தொழிற்முனைவோராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் எனும் சொலவடைக்குத் தகுந்தாற்போல், மீண்டும் அவரது இரண்டாம் இன்னிங்கிஸில் நடிகராகக் கோலேச்சி வருகிறார்.
துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களிலும், பாகிஸ்தான் ஜனாதிபதி அக்யூப் அலி ஜர்வாரியாக நடித்துள்ளார் சஞ்சய் மேந்திரத்தா. Gadar – 2, Vanvaas, Andaaz 2, நெட்ஃப்ளிக்ஸில் Black Warrant தொடர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். துரந்தரின் இரண்டாம் பாகத்தை மக்கள் கொண்டாடும் விதத்தை எண்ணி மிகவும் பூரிப்படைந்து, வரலாற்றுச் சாதனையை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் தானும் ஓர் அங்கம் என்பதில் மிகவும் பெருமிதமாக உள்ளதென அகமகிழ்ந்தார்.
ஆசிஃப் அலி ஜர்தாரி எனும் உண்மையான பாகிஸ்தான் அரசியல்வாதியின் பாத்திரத்தில் தன்னை எப்படிப் பொருத்திக் கொண்டார் என்ற கேள்விக்கு, “எனக்கு இயக்குநர் ஆதித்யா தர்ரின் டீம் நிறைய இன்புட் கொடுத்தாங்க. அதைலாம் உள்வாங்கிக் கொண்டு, நான் அதற்கு ஒரு பிரத்தியேக வடிவம் கொடுத்தேன். எனக்கு அவரது உடற்மொழியை அப்படியே இமிடேட் செய்வதில் உடன்பாடில்லை. கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மைக்காக நான் உச்சரிப்பில் மட்டும் மிகவும் கவனமாக இருந்தேன். நாம் இந்தியாவில் பேசும் உருது மொழியைத்தான் அவர்களும் பேசுகிறார்கள். ஆனால், அதை பாகிஸ்தானுக்கே உரிய தொனியைக் கலந்து உச்சரிக்கிறார்கள். அந்தத் தொனியைப் பிடித்ததும் கதாபாத்திரத்திற்கு உயிர் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நடிப்பு என்பது கற்பனையாக சூழலில் நாம் எப்படி நம்மை உண்மையாகப் பொருத்திக் கொள்கிறோம் என்பது தானே!” என்றார்.

பாலிவுட் நட்சத்திரங்களினுடைய மனைவிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து, மதூர் பந்தார்கர் இயக்கியுள்ள Wives படத்தில் நடித்துள்ளார். தென்னிந்தியத் திரைப்படங்களிலும் நடிக்க விரும்பும் அவர், தற்போது ஒரு தெலுங்குப் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். ஆனால், இவர் தென்னிந்திய சினிமாவிற்குப் புதிதில்லை. மலையாள நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பில் உருவான ‘கன்னூர் ஸ்குவாட் (2023)’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், தமிழில், அவரை மிகவும் கவர்ந்த படமென பைசன் படத்தைக் குறிப்பிட்டு, அந்தப் படத்தின் அசலான எமோஷனை மிகவும் வியப்பாகச் சிலாகிக்கிறார். தொடக்கத்தில், மாஸ் படங்களில் நடிக்கவேண்டும் என்று நினைத்தவர், பின் கிளாஸான படங்களில் நடிக்கவேண்டும் எனத் மாறியதாகச் சொல்லி, தற்போது, பைசன் போன்ற மாஸும் கிளாஸும் கலந்த கதையம்சமுடைய படங்களில் நல்ல கதாபாத்திரத்தினைத் தேர்வு செய்து நடிக்கவேண்டும் என்ற கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்.
பான்-இன்டர்நேஷ்னல் படமாக உருவாகவுள்ள ஒரு தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன், அது எத்தகைய படம் என்பது குறித்தும், தனது கதாபாத்திரம் குறித்தும் அறிவிக்க இயலாது என்றார் அழகான புன்னகையுடன்.
(அவரது இன்ஸ்டா ஐடி: https://www.instagram.com/sanjay.mehandiratta/)


