சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள்.
விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் ‘சூரரைப் போற்று’ படத்தின் கதை.
Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா.
திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், நேர்த்தியான விஷூவலும், ஜி.வி.பிரகாஷின் அற்புதமான இசையுமே! திரையரங்கில் பார்க்க வேண்டிய கொண்டாட்டத்தைப் படம் கொண்டுள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும், கொண்டாட்டத்திற்கான மேஜிக்கைச் செய்கிறது
‘மண்ணுருண்ட’, ‘வெய்யோன் சில்லி’, ‘காட்டுப் பயலே’ ஆகிய பாட்டுகளை எழுதிய ஏகாதேசி, விவேக், சினேகன் ஆகியோரால் முறையே எழுதப்பட்ட பாடல் வரிகளும் தனியே குறிப்பிட்டு சிலாகிக்க வைக்குமளவு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
கேப்டன் கோபிநாத் ஐயங்காரின் கனவிற்கும் போராட்டத்திற்கும், தன் வசனங்களால் இடதுசாரி வண்ணம் தீட்டித் தெறிக்க விட்டுள்ளார் உறியடி இயக்குநர் விஜயகுமார். சுதா கொங்கராவுடன் இணைந்து திரைக்கதையில் உதவியுள்ள ஆலிஃப் சுர்டி, கணேஷா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
நெடுமாறன் ராஜாங்கமாக சூர்யாவும், அவரது காதல் மனைவி சுந்தரியாக அபர்ணா பாலமுரளியும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு கலக்கியுள்ளனர். ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, பாடல், வசனம் என படத்தின் அத்தனை பிரிவுகளுமே அட்டகாசம். கனவைத் துரத்திக் கொண்டு ஓடும் நெடுமாறன் போன்ற ஆட்களின் நட்பை அவரது நண்பர்கள் எப்படிச் சமாளித்தனர் என்பது மட்டும் மிஸ்ஸிங். சூரனாய், திறக்காத கதவுகளையும் ஓங்கித் தட்டினால் நிச்சயமாகத் திறக்கும் என்ற நம்பிக்கையைப் படம் ஏற்படுத்துகிறது. ஒரு விமானப்படை அதிகாரி, டிக்கெட்டிற்காக அவ்வளவு உருக்கமாக இறங்கி மன்றாடுவாரா என்பது ஐயமே என்றாலும், அத்தகைய நெகிழ்வான தருணங்கள்தான் சூரனைப் பலப்படுத்துகிறது. சூர்யா, தன் உடல்மொழியாலும் முகபாவனைகளையும், உணர்ச்சிகளை அநாயாசமாகக் கடத்திப் பிரமாதப்படுத்தியுள்ளார். ஊர்வசியிடமிருந்து அழகாய் குணசித்திர நடிப்பை வாங்கியுள்ளார் சுதா கொங்கரா. வில்லன் பரேஷ் ரவேல் கச்சிதமான தேர்வு.
ஓடிடி-யில் வெளியாகும் படமும், திரையரங்கில் வெளியானது போலவே சிலாகிக்கக் கூடிய அளவிற்கு இருக்குமெனக் காட்டிய சுதா கொங்கராவிற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!