Shadow

சூர்யா வெளியிட்ட கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் போஸ் வெங்கட் தன் திரைவாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை இயக்குநராகத் துவங்கி உள்ளார். இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் ‘கன்னி மாடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

கன்னி மாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி, “இப்படத்தின் டிசைன்ஸ் பார்ப்பதற்குத் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்ததினால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நான் எதிர்கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இது பற்றி மேலும் சொல்லவேண்டும் என்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்த கன்னி மாடம்” என்றார்.

Kanni-Maadam-firstlook-poster

மேலும், “நான் இதற்கு முன் சொன்னதுபோல், பெண்களுக்கு அசாத்தியமான கோட்டையாக இருப்பது பற்றிய சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவல் தான் இதற்குத் தூண்டுதலாக அமைந்தது. மற்றொரு சூழலில் இந்த கன்னி மாடம் என்பது ஒரு நினைவிடமாக அனுசரிக்கப்படுகிறது. மக்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்கள் மறைந்த பிறகு அவர்களை நினைவுகூறும் வகையில் விளக்குகளை ஏற்றிவைத்தனர். சில இடங்களில், பெண்கள் பருவ வயதை அடையும் நேரத்தில், அவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்குளே இருக்க வைக்கின்றனர். அந்த நேரத்தில் கன்னி மாடத்தின் விளக்கு ஏற்றப்படும்” என்று படத்தின் தலைப்பைப் பற்றி விளக்கினார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி ஃபிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.

>> ஒளிப்பதிவு – ஹரிஷ் J இனியன்
>> படத்தொகுப்பு – ரிஷல் ஜெய்னி
>> கலை – சிவ ஷங்கர்
>> பாடல் – விவேகா
>> சண்டை – தினேஷ் சுப்புராயன்