

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் பாண்டிராஜ், “’தலைவன் தலைவி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்தக் கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் – பேரரசி.
நேரில் பார்த்ததைப் படமாக எடுக்க முடியாது. ஆனால், ‘இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?’ என்ற ஒரு கேள்விதான் இந்தக் கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறு ஒன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான், அழ வைப்பான், டார்ச்சர் செய்வான், இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாது.
பொதுவாக ஹீரோ கேரக்டர் என்றால் அதற்கென்று ஒரு வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் ஆகாச வீரன். இந்த கேரக்டரை எல்லா ஹீரோக்களாலும் செய்திட இயலாது. இந்தக் கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும். இதை அவரை சந்தோசப்படுத்துவதற்காகக் குறிப்பிடவில்லை. நீங்கள் பார்க்கும் போது இதை உணர்வீர்கள். பாராட்டுவீர்கள். இந்தக் கதாபாத்திரத்தை இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நான் நம்பினேன்.
சீரியஸ் ஆகவும் மாஸாகவும் சென்று கொண்டிருக்கும் டக்கென்று அது காமெடியில் முடியும். காமெடியில் சென்று கொண்டிருக்கும் போது அது எமோஷனலாக மாறும். வண்டி ஓட்டத் தெரியாமல் வண்டி ஓட்டுவார்களே! அதைப் போன்றது தான் இந்த கதாபாத்திரம். ஆனால் ரசிக்கக்கூடிய கேரக்டராக இருக்கும். லவ் பண்ணக் கூடிய கேரக்டராகவும் இருக்கும். அந்த கேரக்டர் மீது வெறுப்பு வராது. இதனால் தான் இந்தக் கேரக்டரை விஜய் சேதுபதி ரசித்து ரசித்துச் செய்திருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அனைவரும் ரசித்தோம்.
பேரரசியின் கதாபாத்திரமும் ஆகாச வீரனைப் போன்றது தான். பேரரசியின் கதாபாத்திரத்திற்கும் எந்த வரையறையும் இருக்காது. அந்தக் கதாபாத்திரமும் அப்படித்தான். அழகானவள், அன்பானவள், அன்பான அம்மா, அழகான மருமகள், நல்ல மனைவி என்று இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்று தெரியாது. இதுபோன்ற கதாபாத்திரத்தைக் கையாள்வது கடினம். ஆனால் பேரரசி ஆகாச வீரனை அதிகமாகக் காதலிப்பார். இதுபோன்ற கதாபாத்திரத்தை நித்யா மேனனைத் தவிர வேறு யாராலும் ஏற்று நடித்திருக்க முடியாது.
நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். பத்துப் படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் நித்யா மேனன் தான் வேண்டுமென்று என்ன நினைத்து எழுதினேன். அவர் தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதற்காகத் தயாரிப்பாளர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கணவன், மனைவி சண்டையை டாம் & ஜெர்ரி லவ் ஸ்டோரி என்று சொல்லலாம். அந்த சண்டை, படம் பார்க்கும் ரசிகர்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளும் வகையில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்தேன். உண்மை தான்.
படப்பிடிப்பு நடைபெற்ற 70 நாள்களும் இப்படித்தான் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் யாரேனும் சிறிய இடையூறை ஏற்படுத்தினாலும் கோபப்படுவேன். அதற்காக இந்தத் தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொருத்தவரை சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் படத்தை நிறைவு செய்து தர வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.
அந்த வகையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களில் நிறைவு செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டுப் பணியாற்றத் தொடங்கினோம். 72 நாட்களில் நிறைவு செய்தோம். படத்தில் பணியாற்றிய அனைவரும், ‘படப்பிடிப்பு அதற்குள் நிறைவடைந்து விட்டதே! இன்னும் சில நாட்கள் நீடிக்காதா?’ என வருத்தமடைந்தனர். இதே போன்றதொரு அனுபவம் எனக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போதும் ஏற்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்தப் படத்தை விட அதிகமாக அதே போன்றதொரு அனுபவம் கிடைத்தது. படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி பரோட்டாவைத் தயாரிப்பார். சாக்லேட் பரோட்டா, வாட்டர்மெலன் பரோட்டா என வகை வகையாகக் கண்டுபிடித்து தயாரிப்பார். அதுவும் சுவையாக தான் இருக்கும்.
முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘பசங்க 2’ படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போது சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தில் அவர் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார். சிறந்த ஆல்பமாக இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதிய பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதி இடம்பெற்ற ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..’ என்ற அப்பா பற்றிய பாடல் எப்படி பெரிய வெற்றியைப் பெற்று இன்றும் அனைவரது நினைவில் நீங்காமல் இருக்கிறதோ, அதே போன்று இந்தப் படத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவைப் பற்றிய பாடலும் ஹிட்டாகும். இந்தப் பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் மெட்டு அமைக்கும் போது எனக்குப் பிடித்திருந்தது. அதனைக் கார்த்திக் நேத்தா பாடலாக எழுதும் போதும் எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பாடலைக் கேட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்தப் பாடலைத் தொகுப்பதற்காக எடிட்டருக்கு அனுப்பினேன். அவரும் இந்தப் பாடலைக் கேட்டு அழுதார். இந்தப் பாடலை காட்சி மொழியாக நீங்கள் பார்க்கும் போது. உண்மையில் நீங்கள் பிரிவைப் பற்றி உணர்வீர்கள்.
இந்தத் திரைப்படத்தில் விவாகரத்தைப் பற்றிப் பேசி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏன் என்ற ஒரு கேள்விதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள்.
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களைப் பார்த்த பிறகு நிறைய அண்ணன், தங்கைகளும் தங்களிடமிருந்த விரோதத்தை மறந்து ஒன்றிணைந்தாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்தப் படம் வெளியான பிறகு கணவன் மனைவி விவாகரத்து குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால், ‘அதற்குச் செல்ல வேண்டுமா?’ என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்தப் படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

