தர்மபிரபு படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக ரேகாவும், அப்பாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர்.
படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை ரேகா, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர், ‘அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள்” என்றார்.
இயக்குநர் முத்துகுமரன் பேசும்போது, “நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்தக் கதையைப் பற்றிப் பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான். அதை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுத்திருக்கிறோம். ராதாரவி யோகிபாபுவிற்குத் தந்தையாக நடித்திருப்பார். அவரைத் தவிர வேறு யாரும் இந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கப்மாட்டார்கள்.
தயாரிப்பாளரிடம் இக்கதையைக் கூறி, தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன். கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்றார். கலை இயக்குநர் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக செட் அமைத்துக் கொடுத்தார். அதுதான் படத்திற்கு முக்கியம். அதேபோல், ஆடை வடிவமைப்பு முருகன் சிறப்பாக செய்து கொடுத்தார். ‘கன்னிராசி’ படத்தை 45 நாட்களில் இயக்கி முடித்தேன். இசைக்கு ‘கன்னிராசி’ படத்திற்கே ஜஸ்டினை அழைக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அவரை அழைக்கமுடியவில்லை. இந்தப் படத்தில் ஜஸ்டின் இசையமைத்ததில் மகிழ்ச்சி. யோகிபாபுவைப் பற்றி நான் பேசிக் கொண்டே போகலாம். அவரை நடிகனாகும் முன்பிருந்தே தெரியும். ஒரு காலகட்டத்தில் அவர் சம்பாதித்து வரும் தொகையில் தான் நாங்கள் சாப்பிடுவோம். அவர் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
யோகிபாபு பேசும்போது, “இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றிக் கூறி, ‘இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா?’ என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
முதலில் மேக் அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், ‘இந்த கெட் அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும்’. அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்புத் தளத்தில் பயந்திருக்கிறார்கள். காலம் கடந்தும் இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும்” என்றார்.
ஜஸ்டின் பிரபாகரின் இசையில், எமலோகத்தில் வரும் ஒரு பாடலுக்கு, எம்.எஸ்.வி.-யின் மகன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் முழுவதும் ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள் என படக்குழுவினர் நம்புவதால், படம் மாபெரும் வெற்றியடைவது உறுதி என மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.