Shadow

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

Gurkha---Yogibabu-as-hero

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.

“காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய ‘முகம்’ இந்தப் படத்தைக் காப்பாற்றும்” என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். ‘என் முகம் என்ன கூர்க்கா போலவா இருக்கு?’ என அங்கலாய்ப்பார் யோகிபாபு. ‘ஆமாண்ணே, இது முகம் போலவே இல்லை’ என்பார் சக கூர்க்கா.

“இயக்குநர் சாம் ஆண்டன் யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்த்ததில்லை எனச் சொன்னார். ஆனால் அவர் எடுக்கும் காட்சிகளைப் பார்த்தால் 20 படங்கள் வேலை செய்த அனுபவம் உள்ள ஒருவர் இயக்குவது போல இருக்கும். எஸ்பிபி சாரை முதன் முறையாக நான் ‘பயணங்கள் முடிவதில்லை’ பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் பார்த்தேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ அதை மிகச் சிறப்பாகக் கொடுப்பார், அவர் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது படக்குழுவுக்கே பெருமை. யோகி பாபு சினிமாவிற்கு வர ரொம்பக் கஷ்டப்பட்டார். இப்போதும் வேலை காரணமாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். எல்லோருக்கும் நல்லவராகவே இருக்கிறார்” என்றார் நடிகர் மயில்சாமி.

100 படத்தின் எடிட்டிங் சமயத்தில் ஒரு ஐடியாவைச் சொன்னார் சாம் ஆண்டன். தயாரிப்பாளர் யார் எனக் கேட்ட போது இந்தப் புது ஐடியாவை யார் நம்புவாங்க என்ற சந்தேகம் இருந்தது. நாமே தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம், கிஷோர் அண்ணன் முன்வந்தார். யோகிபாபுவிடம் கால்ஷீட் கேட்டபோது ஒரே கட்டமாக 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் என பல நண்பர்களும் உதவி செய்தனர். திரையரங்கை விட்டு வெளியில் வரும் அனைவரும் புன்னகையோடு தான் வெளியே வருவார்கள்” என்றார் தயாரிப்பாளரும் படத்தொகுப்பாளருமான ரூபன்.

“கனா படத்தொகுப்பின்போது இந்த கூர்கா படத்தில் ஒரு பாடல் நீங்க எழுதணும் எனச் சொன்னார் ரூபன். அது தான் இந்தப் பாடலை நான் எழுத பிள்ளையார் சுழி. நான் பீட்சா, ஜிகர்தண்டா பாடல்கள் எல்லாம் எழுதி முடித்த நேரத்தில், எனக்குப் பாடல்கள் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் என்னை நம்பி பாடல் வாய்ப்பு கொடுத்தார் சாம் ஆண்டன். அவர் என் மீது வைத்த முதல் நம்பிக்கை தான் என்னை அடுத்தடுத்து நகர உதவியாக இருந்தது. இவர்களைப் போல நிறைய புதிய தயாரிப்பாளர்கள் வரணும்” என்றார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.

“ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான படம் இது. 34 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும், நாங்களே தயாரிக்கிறோம் என்றபோது நிறைய சிரமங்கள் இருந்தது. யோகிபாபு யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே கட்டமாக மொத்தமாக தேதிகளைக் கொடுத்தார். ரொம்ப பிஸியாக இருந்தாலும், தனக்கென ஓய்வுக்கு நேரம் ஒதுக்காமல் எல்லாப் படங்களுக்கும் தேதிகளைக் கொடுத்து, அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்” என்றார் இயக்குநர் சாம் ஆண்டன்.

“தயாரிப்பு நிறுவனத்துக்கு 4 மங்கீஸ் என பொருத்தமான பெயரை தான் வைத்திருக்கிறார்கள். குரங்குகள் என்பவை தான் தங்களுக்குள் ஒத்தாசையாக இருக்கும். அதுபோல இந்தத் தயாரிப்பாளர்கள் 4 பேருமே சுமையைத் தங்கள் தோளில் போட்டுக் கொண்டு இந்தப் படத்தை முடித்திருக்கிறார்கள். இது யோகிபாபுவின் ஸ்பெஷல் திரைப்படம், ஒரு கமெர்சியல் படத்துக்கு என்னென்ன தேவையோ அது எல்லாமே இந்தப் படத்தில் இருக்கும். யோகிபாபு மற்ற படங்களில் ரொம்ப பிசியாக ஓய்வே இல்லாமல் நடித்து விட்டு இந்தப் படத்துக்கு வருவார். ஆனாலும் உற்சாகமாக நடித்துக் கொடுப்பார். ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த இயக்குநராக சாம் ஆண்டன் இருப்பார்” என்றார் நடிகர் ரவி மரியா.

“யோகிபாபுவைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன், அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு நடிகர். அவருடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். யோகிபாபு ஓய்வே இல்லாமல் உழைக்கிறார். வெற்றி வந்த பிறகு எல்லோரும் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் மிக முக்கியம். இவர்களைப் போல நிறைய தயாரிப்பாளர்கள் வர வேண்டும். ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக இது அமைந்திருக்கிறது” என்றார் நடிகர் சித்தார்த்.

“எனக்குப் பாடல் பாடுவது மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், சினிமா துறையில் எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால் தான் அனைவருக்கும் வாழ்க்கை. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம், தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது. தண்ணீர் சேமிப்பு என்பது மிக முக்கியம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது அது ஒன்றே!” என்றார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

இந்த விழாவில் நடிகர் ராஜ்பரத், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், சண்டைப்பயிற்சி இயக்குனர் பிசி, இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.