Shadow

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

Zero Degree Publishing

ஜீரோ டிகிரி என்பது சாரு நிவேதிதாவின் மிகப் புகழ் பெற்ற நூலாகும். அப்புத்தகத்தின் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் இணைந்து தொடங்கியுள்ளனர் திருமதி காயத்ரி ராமசுப்ரமணியமும் ராம்ஜி நரசிம்மனும். இப்பதிப்பகத்தின் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திலுள்ள கலையரங்கில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது.

அறிமுக விழாவில், சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டனர். இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையிலான இசைக்குழுவினரின் கர்னாடிக் ஃப்யூஷன் கச்சேரி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்களான வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றனர்.

ராம்ஜி நரசிம்மன் அவர்கள் பேசும் போது, “ ‘சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், ஏராளமான புத்தகங்கள், ஏராளமான பதிப்பகங்கள் இருக்கும் இந்தச் சூழலில் ஏன் இந்தப் புதிய பதிப்பகம்?’ என்ற வினா அனைவரின் மனதிலும் இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. தமிழ்ச் சூழலில் கதைகளை எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகள் மண் மணம் மாறாமல், உயர்ந்த மானிடச் சிந்தனையோடு இருக்கிறது. ஆனால் அது குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருக்கிறது.

என்னுடைய உலகாளவியப் பயணத்தில் நான் கண்டு கொண்ட ஒரு விசயம், தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்திற்கு நிகராக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறுகிய நில எல்லைக்குள் குறுகிய வணிகப் பரப்பிற்குள் இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் தரமாக மொழிபெயர்த்தால், சர்வதேச அளவில் ஆகச் சிறந்த படைப்பாக அமையும் என்று எண்ணினேன். இதனை என்னுடைய வழிகாட்டியான எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் சொன்னேன். அவர் என்னுடைய எண்ணத்தை அங்கீகரித்து தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்குமாறு பணித்தார். இதற்கு தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் மனமுவந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

அத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு இந்தப் பதிப்பகத்தைத் தொடங்கினேன். இதனை என்னுடைய தோழி திருமதி காயத்ரி ராமசுப்ரமணியன் அவர்களுடன் இணைந்து தொடங்கியிருக்கிறேன்” என்றார்.

திருமதி காயத்ரி ராமசுப்ரமணியன் பேசுகையில், “எங்களுடைய இந்தப் பதிப்பகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ப் புத்தகங்களுடன், தமிழிலும் நூல்களை வெளியிடவிருக்கிறோம். அதனை எழுத்து பிரசூரம் என்ற பெயரிலான பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகிறோம். இந்த தருணத்தில் ‘எழுத்து என்ற வணிக முத்திரையைத் தந்து உதவிய எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான சி.சு.செல்லப்பா அவர்களின் வாரிசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே போல் எங்கள் பதிப்பகத்தில் எந்த நூலைக் கேட்டாலும் அதனை இல்லை என்று சொல்லாமல், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அதனை உங்களிடம் சேர்ப்பிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடவிருக்கிறோம்.

இந்தச் சமயத்தில் சாருநிவேதிதா எழுதிய ‘Byzantium’, ‘Unfaithfully yours’, ‘Zero Degree’, ‘The Marginal Man‘ ஆகிய நான்கு நூல்களும், ‘நிலவு தேயாத தேசம்’ என்ற தமிழ் நூலும், பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதி வாரப் பத்திரிக்கையில் ‘ஆகாயத்தில் பூகம்பம் ’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த கதையை, ‘Mid-Air Mishaps ’ என்ற நூலும், ‘ The Verdict Will Seek You ’ ஆகிய இரண்டு நூல்களும், பாலகுமாரன் எழுதிய ‘புருஷ வதம்’ என்ற நூல், ‘Willfully Evil’ என்ற பெயரிலும், இந்திரா சௌந்தராஜன் தமிழில் எழுதிய ‘கிருஷ்ண தந்திரம்’ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Out of the Blue’ நூலும் மற்றும் எழுத்தாளர் அராத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘நள்ளிரவின் நடனங்கள்’ என்ற பெயரிலான புத்தகம் எனப் பத்து நூல்கள் வெளியிடுகிறோம்.

இதில், ‘The Marginal Man‘ என்ற நூலை மொழிபெயர்க்க ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட பல மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றினார்கள். அதன் பிறகு அதனைத் தொகுப்பதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இறுதியில் மொழிபெயர்ப்பாளரும் தொகுப்பாளருமான சூஸன்னா அவர்களின் கடுமையான உழைப்பினால் நிறைவு பெற்றதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அதே போல் எங்களுடைய ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து விரைவில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் எழுதிய ‘இடக்கை’ என்ற நாவலும், பாலகுமாரன் அவர்கள் எழுதிய ‘பிருந்தாவனம்’ என்ற நூலும், மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்ற நூலும், சரவணன் சந்திரன் எழுதிய ‘ஐந்து முதலைகளின் கதை’ என்ற நூலும், தஞ்சை பிரகாஷ், சி. சு.செல்லப்பா, லா.ச.ரா, கு.அழகிரிசாமி, புதுமைபித்தன் ஆகியோர்கள் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் மார்ச் மாத இறுதியில் வெளியாகும்.

ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் ஆறு புத்தகங்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வருகிறோம். எங்களுடைய இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து தரமான பல மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பும் இருக்கிறது என்பதை இங்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.