
அசல் தமிழ் இசையை மையமாகக் கொண்ட புதிய இசை ரியாலிட்டி ஷோவை ‘ரஸ்ட் மீடியா (Rusk Media)’-வின் OTT தளமான ”ஆல்ரைட்! டிவி (Alright! TV)’ அறிமுகப்படுத்தியது. இதில் சக்திஸ்ரீ கோபாலன், அசல் கோலார் மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் வழிகாட்டிகளாக (mentors) உள்ளார்கள்.
தமிழ் சுயாதீன இசை (indie music) இப்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டிலிருந்தே இசையமைக்கும் கலைஞர்கள், பாடலாசிரியர்கள்-பாடகர்கள் முதல் ராப்பர்கள் மற்றும் மேடைக்கலைஞர்கள் வரை, ஒரு புதிய தலைமுறைக் கலைஞர்கள் தமிழ் இசையின் போக்கை மாற்றியமைத்து வருகின்றனர். இப்போது, அவர்களுக்கென ஒரு பிரத்தியேக மேடை கிடைத்துள்ளது.
ஜூலை 23 அன்று தொடங்கிய ‘ஐ-பாப்ஸ்டார் தமிழ் (I-POPSTAR Tamil)’, அசல் தமிழ் இசையையும் அதை உருவாக்கும் கலைஞர்களையும் கொண்டாடும் ஒரு புதிய இசை ரியாலிட்டி தொடராகும். இத்தொடர் ‘ஆல்ரைட்! டிவி’-இல் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ‘மீடியா மேசன்ஸ் (Media Masons)’ யூடியூப் சேனலில் ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும். தமிழகம் முழுவதிலுமிருந்து புதிய திறமையாளர்களைக் கண்டறிவதையும், மாநிலத்தின் வளர்ந்து வரும் சுயாதீன இசை இயக்கத்தைப் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இசையமைப்பாளரும் இசை உலகின் அடையாளமுமான யுவன் சங்கர் ராஜா, ‘சூப்பர் மென்டராக’ (முதன்மை வழிகாட்டியாக) இத்தொடரை வழிநடத்துகிறார். இவருடன் சக்திஸ்ரீ கோபாலன், அசல் கோலார் மற்றும் அந்தோணி தாசன் ஆகிய பிரபல கலைஞர்களும் இணைந்து, போட்டியின் முழு காலக்கட்டத்திலும் போட்டியாளர்களின் அணிகளுக்கு வழிகாட்டுவார்கள். தொலைக்காட்சி ஆளுமை முகமது குரைஷி மற்றும் பாடகர் சாம் விஷால் ஆகியோர் இத்தொடரைத் தொகுத்து வழங்க, சத்யா பிரகாஷ் இசை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
திரைப்படப் பின்னணிப் பாடல்களை மையமாகக் கொண்ட வழக்கமான இசைப் போட்டிகளிலிருந்து மாறுபட்டு, ‘ஐ-பாப்ஸ்டார் தமிழ்’ முழுக்க முழுக்க அசல் படைப்பாற்றலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு, பன்னிரண்டு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா நான்கு பேர் கொண்ட மூன்று அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். மொத்தம் பதினான்கு அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில், போட்டியாளர்கள் தங்கள் திறமை, தனித்துவம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு ஆக்கப்பூர்வமான சவால்களை எதிர்கொள்வார்கள்; இறுதியில் ஒரு கலைஞர் இந்த சீசனின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
‘ரஸ்க் மீடியா’-வின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியும் (COO) இணை நிறுவனருமான சாந்தனு சிங், “திரைப்பட இசைக்கு அப்பால், அசல் இசையையும் அதை உருவாக்கும் அற்புதமான கலைஞர்களையும் கொண்டாடும் ஒரு தளத்திற்காகத் தமிழ் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதற்கான எங்கள் விடையே ‘ஐ-பாப்ஸ்டார் தமிழ்’. படைப்பாற்றலுக்கு முன்னுரிமை அளிக்கும், கலைஞர்கள் தங்கள் தனித்துவமான இசை பாணியைத் தக்கவைத்துக்கொள்ளும் மற்றும் பார்வையாளர்கள் தமிழ் இசையின் அடுத்தகட்ட அலையைக் கண்டறியக்கூடிய ஒரு நிகழ்ச்சியை உருவாக்க நாங்கள் விரும்பினோம். இது பல கலைஞர்களின் சிறப்பான இசைப் பயணத்திற்கு ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
யுவன் சங்கர் ராஜா, “இன்று மிகவும் சுவாரஸ்யமான இசை, புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் தங்கள் கதைகளைத் தங்கள் பாணியிலேயே சொல்லவும் விரும்பும் சுயாதீனக் கலைஞர்களிடமிருந்து (independent artists) வருகிறது. ‘ஐ-பாப்ஸ்டார் தமிழ்’ என்பது புதிய திறமையாளர்களைக் கண்டறிவதற்கும், அவர்கள் தங்கள் தனித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்” என்றார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் முகமது குரைஷி, ” ‘ஐ-பாப்ஸ்டார் தமிழ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு உணர்வைத் தருகிறது. சென்னையின் சுயாதீன இசைச் சூழல் (indie scene), சிறிய அளவிலான நிகழ்ச்சிகளிலிருந்து தொடங்கி இன்று அரங்கம் நிறைந்த நிகழ்ச்சிகள் வரை வளர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இப்போது இந்த நிகழ்ச்சி அந்தக் கலைஞர்களுக்குப் பரவலான பார்வையாளர்களைச் சென்றடையும் ஒரு தளத்தை வழங்குகிறது. புதிய குரல்கள் வெளிப்படுவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
மற்றொரு தொகுப்பாளர் சாம் விஷால், “தமிழ் சுயாதீன இசையில் கண்டறியப்படக் காத்திருக்கும் அற்புதமான திறமைகள் உள்ளன. ‘ஐ-பாப்ஸ்டார் தமிழ்’ அந்தக் கலைஞர்களுக்குத் தகுதியான மேடையை வழங்குகிறது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு தனித்துவமான கதை உள்ளது; பார்வையாளர்கள் அவர்களுடன் ஒன்றிணைவதைக்காண மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

