
பூரண அமைதியாக மட்டுமே இருக்கும் ஓர் உலகைக் கற்பனை செய்யுங்கள். திடீரென, அவ்வுலகில் மாற்றம் ஏற்பட்டு, ஒலியை உணரும் திறன் பெற்று உங்கள் மனதுக்குப் பிரியமானவருடனும், உலகத்துடனும் தொடர்பு ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அத்தகைய மாற்றத்தைச் சாத்தியமாக்குகிறது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. நவீன மருத்துவ முன்னேற்றத்தாலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பான நிபுணத்துவத்தாலும், காதுக்குள், உட்செவியில் நுண்கருவி பொருத்தப்பட்டு, பல காலங்களாகப் போராடி வந்த செவிப்புலன் இழப்பில் இருந்து மீட்டு, நம்பிக்கையையும் ஒலியையும் அளிக்கிறது காவேரி மருத்துவமனை.
காது கேளாமை என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். பிறவியிலேயே காது கேளாமை அல்லது மூளை காய்ச்சல், நாள்பட்ட காது தொற்றுகளுடன் பிறந்த குழந்தைகள் முதல் மனச்சோர்வு மற்றும் தனிமை போன்ற உளவியல் மற்றும் சமூக தாக்கங்களைச் சமாளிக்கும் வயதானவர்கள் வரை என இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது.

மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை. இந்த அறுவை சிகிச்சைகள், ஆழ்ந்த காது கேளாமை கொண்ட ஒரு வளர்ந்த நபரிடமிருந்து இரண்டு குழந்தைகள் வரை நீள்கிறது. அக்குழந்தைகளில் ஒருவர் டவுன் சிண்ட்ரோத்துடனும், இன்னொரு குழந்தை, மொண்டினி உருமாற்றம் எனும் மிகவும் அரிய பிறவி உட்செவி குறைப்பாட்டுடனும் பாதிக்கப்பட்டவர். ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு மருத்துவ சாதனையை மட்டுமல்ல, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அற்புத தருணத்தையும் குறிக்கிறது.
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி உட்பொருத்தல் திட்டத்திற்கு, காது, தொண்டை (ENT) துறையின் தலைவரான மருத்துவர் ஆனந்த் ராஜு தலைமை தாங்குகிறார். 600க்கும் மேற்பட்ட வெற்றிகரமான உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சைகள் மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க மருத்துவர் ஆனந்தின் நிபுணத்துவம், மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பிரச்சனைகளுக்குக் கூட மிக உயர்ந்த தரமான பராமரிப்பைப் பெற்றுத் தருவதை உறுதி செய்கிறது. மயக்க மருந்து நிபுணர்கள், செவிப்புலன் மருத்துவர்கள் (Audiologists) மற்றும் இயல்புமீட்பு சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட குழு அவருக்கு உறுதுணையாக ஒன்றிணைந்து நோயாளிக்கான மிகச் சிறந்த சிகிச்சையைச் சாத்தியமாக்குகின்றனர்.
“எந்த இரண்டு நோயாளிகளும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை” என்கிறார் மருத்துவர் ஆனந்த் ராஜு. மேலும், “எங்கள் அணுகுமுறை தனிப்பயனாக்கப்பட்ட, நுணுக்கமான, மற்றும் பல துறைகளை ஒருங்கிணைத்து, அரிதான அல்லது சவாலான காது பிரச்சனைகளுக்கும் பாதுகாப்பான சிகிச்சையை உத்திரவாதம் அளிக்கிறது” என்றார்.
● சிக்கலான காது நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணி, வெற்றிகரமான உட்செவு உட்பொருத்துதல் அறுவை சிகிச்சையின் பலனாக, பல வருட நிசப்தத்தில் இருந்து மீண்டு, ஒலி பெற்று, உலகத்துடனான தனது தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டார்.
● டவுன்’ஸ் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட, பிறவியிலேயே காது கேளாத ஒரு சிறுவன், அவனது உட்பொருத்துதல் சிகிச்சைக்குப் பிறகு கேட்கும் திறனைப் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தான்.
● தண்டுவட வளைவும், அரிதான உட்செவி உடற்கூறியல் கொண்ட ஆறு வயது சிறுமிக்கு, உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மற்ற மருத்துவமனைகள் அவளை மறுத்த போதிலும், அவளுடைய வெற்றிகரமான அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவர் ஆனந்த் ராஜுவின் நிபுணத்துவத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் உட்செவி உட்பொருத்துதல் சிகிச்சை உண்மையிலேயே மிக விரிவானது. மருத்துவ கணிப்பைப் பெறுவது, அறுவை சிகிச்சை, கருவியைச் செயல்படுத்தல், சிகிச்சை மற்றும் நீண்டகால பராமரிப்பை ஆகியவற்றை நோயாளிகள் பெறுகிறார்கள். ஆரம்பகால நோயறிதல், குறிப்பாக குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்தல், அவர்களது சிறப்பான பேச்சிற்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அச்சாணியாக அமைகிறது.

