துல்கர் சல்மான் நடிக்கும் சோலோ படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிறது இப்படம். இந்தப் படத்தைப் பற்றிய அறிமுக விழாவில், இயக்குனர் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“சோலோ தான் என் முதல் தென்னிந்திய படம். டேவிட் பாதி டப் செய்யப்பட்ட படம். சோலோவைத் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. இந்தப் படத்தில் 3 ஒளிப்பதிவாளர்களும் 11 இசையமைப்பாளர்களும் பணிபுரிகின்றனர் படத்தில் மொத்தம் 15 பாடல்கள் ” என்றார் இயக்குநர் பிஜாய் நம்பியார்.
“எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குநர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நல்ல படங்களை எப்போதுமே கொடுக்க முனைகிறேன். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் ஊக்கம் அளிக்கிறார்கள். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை எடுப்பது 8 படத்தில் நடிப்பதற்கு சமம். என் மூன்று தமிழ்ப் படங்களின் விழாவிலும் மணிரத்னம் சார் இருந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. நான் மிகவும் அதிர்ஷடமாக உணர்கிறேன்” என்றார் படத்தின் நாயகன் துல்கர் சல்மான்.
“துல்கருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இரண்டு மொழிகளிலும் சேர்த்தால், இந்தப் படத்துக்கு மொத்தம் 30 பாடல்கள் வருகிறது. நாங்கள் ஒரே ஒரு பாடல் எடுக்கவே ரொம்ப கஷ்டப்படுகிறோம்” என்றார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன்.
“இப்போது பிஜாய் நம்பியார் காட்டியது தான் படத்தின் உண்மையான முன்னோட்டம். இந்த முன்னோட்டம் அருமையாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கிறது” என்றார் இயக்குனர் மணிரத்னம்.
சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’.