

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான திரைப்படம் அக்யூஸ்ட் ஆகும். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக் குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவினை வடபழனி பரணி ஸ்டூடியோவில் நடத்தினர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என்.பன்னீர்செல்வம், ”படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது உதயாதான். இந்தப் படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும் உதயாவிற்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையத் திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், ”படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. ‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற குறள்தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ.எல்.உதயாதான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களைச் சந்தித்தபோது ரசிகர்களையும் ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார்.
ரசிகர்கள் அனைவரும், ‘கணக்கு எப்படி இருக்க?’ என்ற அளவிற்கு நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவரும் உதயாதான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவைத்தான் குறிப்பிடுவேன். கன்னடத் திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் ஏ.எல்.உதயா, ”பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா எனத் தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளைத் தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்டபாடு இருக்கிறதே! அதையெல்லாம் விவரிக்க இயலாது. பகிர்ந்து கொள்ளவும் முடியாது.
இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினைத் தயாரித்துவிட்டோம். வெளியித்ட திட்டமிடப்பட்டபோது இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாகப் பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன.
யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ஓட வைப்பதற்காகப் போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தப் போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டுத்தான் செய்து வருகிறோம்.
இது கடவுள் எனக்குக் கொடுத்த கடைசி வாய்ப்பு. எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இந்தத் திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வெளியில் வர விடக் கூடாது எனத் தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதற்கு ஊடகங்களும் மக்களும்தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாகத் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதே மிகப் பெரிய வெற்றிதான். அதனால்தான் இதற்குக் காரணமான ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.
இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படம் ஒரு மிகப் பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம்தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாகச் சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில்தான் தற்போது இருக்கிறோம்.
இந்தத் தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்தக் குறையையும் சொல்ல இயலாது.
திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்தத் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லித் திரையரங்க உரிமையாளர்கள் தற்போதுவரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம்தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில்தான் சுயநலம் அதிகம் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதுதான் நம்முடைய முதன்மையான பணி. இதற்காகத் தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும்.
தயாரிப்பாளர் கேயார், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும்தான் சினிமா நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும்தான் பார்க்கப் போகிறேன்.
இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை. அஜ்மலும் ஒரு ஹீரோதான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி. இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் ‘டண்டனக்கா டான்’ என்ற பெயரில் கதையைச் சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த ‘அக்யூஸ்ட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்” என்றார்.

