
ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லர் திரைப்படம் ‘லெவன்’ ஆகும். இப்படத்திற்காக ‘தமுகு (TAMUGU – TAMil telUGU)’ எனும் சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்தியேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாடலைப் பற்றிப் பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “பரபரப்பான க்ரைம் த்ரில்லரான ‘லெவன்’ படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் தெலுங்கு வரிகளைக் கொண்டு பாடலை உருவாக்கியுள்ளோம். இதன் காரணமாகவே இதற்கு தமுகு என்று பெயரிட்டுள்ளோம்” என்றார். கோடை விடுமுறையின் போது ‘லெவன்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லரான ‘லெவன்’ படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர். இயக்குநர் சுந்தர்.சி-யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’, ‘பிரம்மன்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவைக் கவனித்திருக்கிறார். படத்தொகுப்பைத் தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. கையாண்டுள்ளார்.