Shadow

“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்திருக்கிறார். அவரது இசையால் எப்போதும் அவர் நம்முடன் தான் இருக்கிறார். அவரது ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்கள் எங்களுக்கு ஞாபகம் வரும். தற்போது அவரிடம் பணி புரியும் போது அவரைப் பற்றி நிறையத் தெரிய வந்தது. உண்மையில் அவர் மிகத் தன்னடக்கமானவர். என்னிடம் படம் குறித்து ஏதாவது விவாதிக்கும் போது கூட, ‘இதை நான் சொல்லலாமா?’ என அனுமதி கேட்பார். அவர் இசையமைப்பைப் பார்ப்பது வரம். அவர் இசையில் மெஜீசியன். விடுதலை படத்தில் ஒரு பாடலுக்கு நான்கு பாடல்கள் தந்து விட்டார். அவர் வரலாற்றை எடுப்பது என்பது நம் நாட்டின் வரலாற்றுப் பதிவாகும். கிட்டதட்ட 80 வருட வரலாறு. நம் வரலாற்றின் புக்மார்க்காக அவர் இசை இருக்கிறது. அவர் வாழ்வு படமாவது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தனுஷ் நாயகனாக நடிப்பது இன்னும் மகிழ்ச்சி. அவருக்கு இது மிகப் பெரிய சவால். ஆனால். அந்த சவால்களை அவர் தாண்டி வருவார். இயக்குநர் அருணுக்கு இது மிகப்பெரிய பரிசு. இந்தப் படத்தில் இளையராஜா சார் இசையைக் கேட்க நான் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் தனுஷ், “இது வாழ்வின் மிக முக்கியமான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, இசைஞானி இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகன். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். அது தான் உண்மை. நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும்போது, அவை நிறைவேறும். இங்குப் பலரும் ராஜா சாரின் இசையில் தான் தங்கள் கவலைகளை மறக்கிறார்கள். இரவுகளில் தூக்கம் வராதவர்கள் அவரது இசையால் தான் தூங்குகிறார்கள். என் பல இரவுகளை அவரது இசையில் தான் கழித்திருக்கிறேன். எனக்கு இரண்டு பேரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது கனவு. ஒன்று ரஜினிகாந்த் சார், மற்றொன்று இளையராஜா சார். இப்போது இளையராஜா சாரின் பாத்திரத்தில் நான் நடிப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகனாக என் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்திலிருந்து, எப்போதாவது ஒரு இக்கட்டான காட்சிகள் நடிக்கும் சூழ்நிலை வரும்போது, ராஜா சார் பாடல்களை ஹெட்போனில் போட்டுக் கேட்டு, பின்பு அதன் தாக்கத்தில் தான் நடிப்பேன். இப்போது வரை அவரது பாடல்கள்தான் எனக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்கிறது. அதைப் போல் அவரது படத்திலும் அவராக நடிக்கும் போதும், அவர் என்னை வழிநடத்திச் செல்வார் என்று நம்புகிறேன். இளையராஜா சார் மீதுள்ள அன்பாலும், நட்பாலும் இங்கு வந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் நன்றிகள். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மீது மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது, ஆனால் நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். இந்தப் படத்தை மிக மகிழ்ச்சியாகவும் காதலுடனும் நாம் உருவாக்குவோம். இந்தப் படம் என்பது இளையராஜாவின் மீதான நம் காதல்” என்றார்.

இளையராஜாவின் அற்புதமான பாடல்களின் இசை குறிப்புகளால் நிறைந்த, ஒரு அழகான போஸ்டரை வெளியிட்டு, உலக நாயகன் கமல்ஹாசன் இளையராஜா படத்தினைத் துவக்கி வைத்தார்.