
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப்.
“இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். இயக்குநர் கஸ்தூரிராஜா கதையைச் சொன்னவுடன் இது எனக்குப் புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓகே சொன்னேன்.
ஆரண்ய காண்டம், மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்.
இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்தக் கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை ட்ரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்.
சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை. அகோரி என்றால் ‘ஆ.. ஊ..’ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல. அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம். இந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருப்பதாக உணர்கிறேன்” என்றார் ஜாக்கி ஷெராப்.
படத்தினைப் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசிய போது, “அகோரி கேரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான். அவர் கதையைக் கேட்டுவிட்டு இந்தக் கதை நிறைய வேலை வாங்கும். மலை, காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும். அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது என்று சொல்லி விட, அதற்கப்புறம் வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது.
கதையைக் கேட்டு முடித்த அவர், ‘இதோ வருகிறேன்’ என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம். இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கு என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியைக் கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம் என்று கேட்க ஆடிப் போய் விட்டேன்.
என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாகப் ‘பாண்டி முனி’ வளர்ந்து கொண்டிருக்கிறது” என்றார் கஸ்தூரி ராஜா.