Shadow

ஜெய் பீம் விமர்சனம்

‘ஆர்ட்டிகிள் 15’ போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன.

காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவல்துறையிடம் போராடி, ராசாகண்ணுவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் கொண்டு வருகிறார். செங்கேணிக்கு நீதி கிடைக்கிறது, படம் முடிகிறது, என்றாலும் பார்வையாளர்களுக்குக் பதற்றம் குறைந்தபாடில்லை.

ராசாகண்ணுவாக நடித்துள்ள மணிகண்டனும், செங்கேணியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸும் அசத்தியுள்ளனர். சூர்யா, படத்தின் தாங்கு சக்தி என்றால், தங்கள் நடிப்பின் மூலம் படத்தை ரத்தமும் சதையுமாக நகர்த்துவது மணிகண்டனும், லிஜோமோல் ஜோஸுமே! படத்தின் கடைசிக் காட்சியைக் கவிதை போல் முடித்து வைக்கிறார் இருளர் தம்பதியின் மகள் அல்லியாக நடித்திருக்கும் பேபி ஜோஷிகா மாயா.

அசுரன் படத்தில் தன் பார்வையால் பயமுறுத்திய தமிழ், இப்படத்தில் எஸ்.ஐ. குருமூர்த்தியாக மிரட்டியுள்ளார். நமது எதிரியும் கூட, அவரைப் போன்ற காவல்துறை அதிகாரியிடம் சிக்கிவிடக் கூடாது. அட்வகேட் ஜெனரல் ராம் மோகனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், தமிழுக்கு நல்லதொரு புது வரவு.

நீதி நாயகம் எஸ்.ஏ.சந்துருவின் சமூகச் செயற்பாடுகளின் ஒரு சிறு துளியே இத்திரைப்படம். முழுமையாக இல்லையெனினும், அவருக்கு நிறைவானதொரு ட்ரிப்யூட்டாக இப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்து நடித்துள்ள சூர்யாவிற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

1 Comment

Comments are closed.