Shadow

கண்ட நாள் முதல் பிரியாவின் ‘அனந்தம்’

ஜீ5 ஒரிஜினல் சீரீஸான “அனந்தம்” வரும் ஏப்ரல் 22 அன்று ஜீ5 தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது.

‘கண்ட நாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ முதலிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.”

இந்தத் தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரியா V, “வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. ‘கண்ட நாள் முதல்’ படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் இதைத் தொடங்கினேன். எல்லோரும் இதில் அதே நம்பிக்கையோடு உழைத்துள்ளார்கள். பிரகாஷ் ராஜ் சாருக்கு என் வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு; எனக்கு வாய்ப்பு கொடுத்தவர். அவரைத் தவிர இந்த ரோலை யாரும் செய்ய முடியாது. ஜான் விஜய், சம்பத் என அனைவரும் அட்டகாசமாக நடித்துள்ளார்கள். இதில் எட்டு அத்தியாயத்திலும் தனித்தனி கதை இருக்கும், அதே நேரத்தில் பின்னணியில் ஒரு ஹைப்பர்லிங்க் தொடர்பு இருக்கும். இது ஒரு அற்புதமான அனுபவம். இளையராஜா சாருக்கு நன்றி. அவருக்கு அவரது இசைக்கு ஒரு தொடரை அர்ப்பணித்துள்ளோம். இந்தத் தொடர் பார்வையாளர்களைக் கவருமென நம்புகிறோம்” என்றார்.

ஜீ5 சார்பாகப் பேசிய கௌசிக் நரசிம்மன், “வழக்கமாக மாதாமாதம் புது புது தொடர்களுடன் உங்களைச் சந்தித்து வருகிறோம். இது உண்மையிலேயே புதுமையான ZEE5 ஒரிஜினல் சீரீஸ். நிஜமாகவே தொடரைப் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். ஒரு வீடு பல ஞாபகங்களைப்புதைத்து வைத்திருக்கும். அந்த வீட்டின் மேல் பயணமாகும் கதை. கேட்கும் போதே மிக சுவாரசியமாக இருந்தது. ஒரு வருடமாக உழைத்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.

ஜீ5 சார்பில் சிஜு பிரபாகரன், “முதலில் இதை ஆரம்பிக்கும் போது ஆந்தாலஜி செய்ய வேண்டாமென முடிவெடுத்திருந்தோம். ஆனால் இது ஒரு ஆந்தாலஜி. ஒரு வீட்டின் மீது நிகழும் கதை. பிரியா சொன்ன கதை மிக உணர்வுபூர்வமாக இருந்தது. இத்தொடரில் நடித்த அனைவருமே அட்டகாச நடிப்பைத் தந்துள்ளார்கள்” என்றார்.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன், “எப்போதும் டீம் ஒர்க் வெற்றி பெறும் என்பார்கள். அது இந்தத் தொடரில் நிரூபணமாகியுள்ளது. இது மேலும் வெற்றி பெறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. பிரியா முதன் முதலில் சொன்னபோதே எங்களுக்குக் கதை பிடித்திருந்தது. சொன்னவுடனே கௌசிக்கும் ஆரம்பிக்கச் சொல்லிவிட்டார். ஜீ5 இத்தொடரில் மிகப்பெரிய ஒத்துழைப்பைத் தந்தார்கள். 1964 – 2015 ஒரு வீட்டில் நடக்கும் கதை. ஒரு வீட்டில் நடப்பதால் பல இடங்களுக்கு அலைந்தோம், கடைசியில் ஆச்சி ஹவுஸில் சிறு சிறு வேலைகளைச்செய்து இத்தொடரை எடுத்தோம். இத்தொடரில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிக முக்கியம். சூர்யா மிகச் சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பகத் மிகப் பெரிய பலமாக இருந்தார். மொத்த குழுவும் மிகப் பெரிய அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். எட்டு அத்தியாயங்களில் நீங்கள் ஏற்கனவே கேட்ட பாரதியார் பாடல்களைப் புதுமையான இசையில் தந்துள்ளோம். நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குனர் பிரியா மீது நம்பிக்கை வைத்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். 80 நடிகர்களுக்கு மேல் நடித்துள்ளார்கள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் பகத், “இது எனது முதல் ஒரிஜினல் சீரீஸ். முரளி சார்,பிரியா மேடம் இருவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஒரு கதைக்குள் நிறைய பயணிக்க ஒரிஜினல் சீரீஸ் மிக வசதியாக இருக்கிறது. ஒரு பெரிய முழு நீள திரைப்படத்தை போல் பிரியா மேடம் அழகாகச் செய்துள்ளார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்கள். தமிழில் மிகப் பெரிய இடத்தை அடைந்துள்ள ஜீ5 இந்தத் தொடரை வெளியிடுவது மகிழ்ச்சி” என்றார்.

இசையமைப்பாளர் A.S. ராம், “முரளி ராமன் சார், பிரியா மேடம் இருவரால் தான் இங்கு இருக்கிறேன். இருவருக்கும் நன்றி. ஜீ5 இலிருந்து தந்த ஊக்குவிப்பு மிகப் பெரிய உற்சாகத்தைத் தந்தது. இந்தத் தொடரில் பணியாற்றியது கரும்பு தின்ன கூலி கொடுத்தது போல தான்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா, “இருள் என்பது குறைந்த ஒளி என்றான் பாரதி. அனந்தம் இருந்தால் அங்கு ஒரு நம்பிக்கையும் இருக்கும். அதை தான் இந்த அனந்தம் வீடும் சொல்கிறது. அனந்தம் உங்கள் எல்லோருக்கும் பிடித்தமான பயணமாக இருக்கும்” என்றார்.

ஹேப்பி யூனிகார்ன் சார்பில் V. முரளி ராமன் தயாரிக்க, அனந்தம் ஒரிஜினல் சீரீஸில் இயக்குநர் பிரியா V, திரைக்கதை, எழுத்து மற்றும் வசனங்களுடன், எட்டு எபிசோடுகள் முழுவதும் ஒரு தடையற்ற கதையைச் சொல்லி அசத்தியுள்ளார் இயக்குநர் பிரியா V.

>> திரைக்கதை – பிரியா V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் >> எழுத்தாளர் – பிரியா V
>> வசனங்கள் – ப்ரியா V & ராகவ் மிர்தாத் >> ஒளிப்பதிவு – பகத்
>> தயாரிப்பு வடிவமைப்பாளர் – சூர்யா ராஜீவன்
>> இசை – A.S. ராம்
>> படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா