
‘ஓ மை டாக்’ படத்திற்காக 100க்கும் மேற்பட்ட நாய்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியாற்றியுள்ளனர் படக்குழு.
அவ்வனுபவம் பற்றிப் பேசிய அருண் விஜய், “இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விஷயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளது. ட்ரெய்னர் ராஜாவிற்கு ஒரு பெரிய நன்றி. மேலும் இயக்குநர் சரோவ், எல்லா விஷயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிக கவனம் செலுத்தினார்” என்றார்.
இயக்குநர் சரோவ் சண்முகம் பகிர்ந்து கொண்டதாவது, “நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் B வைத்திருந்தோம்.
இந்தக் கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம். ட்ரெய்னர் ராஜா, நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார், அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டுப் போட்டி ஒரு பிரதானமான விஷயம். நான் அவரை ஊக்குவித்து, நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியைக் கொடுக்கச் சொன்னேன். இது உலகம் முழுக்க உள்ள ஒரு சாம்பியன்ஷிப் போட்டி. அது இங்கும் நிகழ்கிறது.
ஓ மை டாக் திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய் குட்டி சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பைக் கூறும் ஒரு உணர்வுபூர்வமான கதை. அர்ஜூன், சிம்பாவைச் சந்திக்கிறான். அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான். பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களைக் கடந்து, வெற்றிப்பாதையை அடைகிறார்கள்” என்றார்.