Shadow

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

Munnodi director SPTA.Kumar

ஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால் வழங்கும் படம் “முன்னோடி”. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ளார்.

விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, “பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டிருக்கிறது வேண்டாம்’ என்றேன்.

‘வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள். விட்டு விடுங்கள்’ என்றேன். ‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் ‘அக்கம் பக்கம் ‘பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. ‘யாரிடம் வேலை பார்த்தீர்கள்?’ என்றேன். ‘எவரிடமும் இல்லை’ என்றார்.

அவரிடம் பேசியபோது, பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை. ‘முன்னோடி’ படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்டப் பின்னணியில் ஒரு திரைக்கதை வைத்திருக்கிறார். பிரமாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி படம் வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம். இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது” என்றார் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன்.

‘முன்னோடி’ படத்தின் இயக்குநர் குமார் பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார். “நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன். அப்போது என்னைச் சினிமாவில் விடவில்லை. இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்திருக்கிறேன். இப்போதும் கூடக் குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.

இந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களைக் குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப் படக் கூடாதே என்பதுதான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல் , விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா ? இல்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.

‘தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா?’ என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள். ‘நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான்’ என்கிறார்கள். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்துச் சாக வேண்டுமா?

நல்ல வேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார். ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.

இதில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் இது ஒரு டெக்னிஷியன் படம் என்றுதான் சொல்வேன்.

என் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்” என்றார் இயக்குநர் குமார்.