Shadow

ஓ மை டாக் | ‘அப்பா, நான், மகன்’ – அருண் விஜய்

திரைப்படத்துறையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்திருக்கிறது ‘ஓ மை டாக்’ திரைப்படம். மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். தாத்தா, தந்தை மற்றும் மகன் என்ற நிஜமான உறவை இவர்கள் திரையிலும் சித்தரித்திருக்கிறார்கள்.

அருண் விஜய், ”இது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை. நான் கடந்த காலத்தில் என் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமானது. தனது அப்பா மற்றும் தாத்தாவுடன் அறிமுகமாவது, அர்னவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். இது எங்களால் மறக்க இயலாத ஒன்று” என்றார்.

மேலும், படப்பிடிப்பு அனுபவம் குறித்து அவர் பேசுகையில், ”மிகவும் அருமையாக இருந்தது. ஏனெனில் என் அப்பாவும் நானும் பிசியாக இருப்பதால் நாங்கள் ஒன்றிணைந்து உபயோகமாக நேரத்தைச் செலவிடுவது அரிது. மேலும் நான் வீட்டில் இருக்கும் நேரத்தில் அர்னவ் உறங்கிக் கொண்டிருப்பான். எங்கள் மூவரையும் ஒன்றிணைத்ததற்காக இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது என் தந்தை மற்றும் அர்னவ் ஆகியோருடன் செலவழித்த தருணங்கள் அனைத்தும் அழகானவை. அந்த நினைவுகள் அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் அப்பாவிற்கும், அர்னவிற்கும் இடையே உள்ள தனித்துவமான பந்தத்தை நானும் கண்டேன். தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளுடன் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார்கள். என் அப்பாவிடம் எனக்கு இல்லாத சுதந்திரம் அர்னவுக்கு இருந்தது. அவர்கள் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை விரும்பும் மக்களும் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படமாக ‘ஓ மை டாக்’ இருக்கும்” என்றார்.