
டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடு பராமரிப்பில் கண்ணியம், தனிப்பயனாக்கம் மற்றும் மனிதத் தொடர்பை மீண்டும் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ரெமினா என்ற செயற்கை நுண்ணறிவுத் துணை இயங்குதளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

“அன்பு. அக்கறை. நினைவாற்றல்” என்ற உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரெமினா, டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களின் கதைகள், நினைவுகள், அன்றாடப் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் தனித்துவத்தைக் கதைப்புத்தகமாகச் சேமிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு பராமரிப்புத் திட்டத் தளம் அல்லது ஒரு டிஜிட்டல் மருத்துவப் பதிவேடு என்பதைத் தாண்டி, டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடுள்ள நபரைப் புரிந்து கொள்ள குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவி பெறும் வாழ்க்கைக் குழுக்களுக்கு உதவும் வகையில் ரெமினா வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெமினோவின் லோகோவை வடிவமைத்தவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறதி ஒரு நோய் எனச் சாதாரணமாகக் கடந்தாலும், ஒருவர் தம் வாழ்நாளில் போராடிப் பெற்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் மறப்பது என்பது மிகவும் கொடுமையான செயலாகும். ரெமினா, மறதி நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அவரது அடையாளத்தை மீட்டுத் தரும்வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவுகள் மங்கினாலும், ஒருவரது தனித்த அடையாளம் ஒருபோதும் இழக்கப்படக்கூடாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்துவமான தன்மையை அளிக்கும் தனிப்பட்ட நினைவுகள், வாழ்க்கை நிகழ்வுகள், உணர்ச்சித் தூண்டல்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் அன்றாடப் பழக்கவழக்கங்களை அணுகுவதற்குப் பராமரிப்பாளர்களுக்கு உதவுவதன் மூலம், இந்த இயங்குதளம் மறதி நோய்ப் பராமரிப்பைப் பணி சார்ந்த ஆதரவிலிருந்து உறவு சார்ந்த பராமரிப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியச் சூழலுக்கும் கலாச்சாரத்திற்கு தக்கவாறு ரெமினாவை வடிவமைத்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு கோடி பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னுமொரு தசாப்தத்தில் இது இரு மடங்காக அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பராமரிப்பாளர், ஒரு மறதி நோயாளியின் வீட்டுக் கதவை அடையும் முன், அந்தத் தனிப்பட்ட நபரைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிய ரெமினா உதவும். மருத்துவர், பராமரிப்பாளர், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான பாலமாகச் செயற்படுவதோடு, உடனுக்கு உடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் ரெமினா இயங்குதளம் உதவுகிறது.
இயங்குதளத்தின் தொடக்க விழாவிற்கு முன்னதாகப் பேசிய ரெமினாவின் நிறுவனர்களான ஸ்ரீகரும் சுனிதாவும், “டிமென்ஷியா பராமரிப்பை மருந்து அட்டவணைகள் மற்றும் வழக்கமான சரிபார்ப்புப் பட்டியல்களுக்குள் சுருக்கிவிட முடியாது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கைக் கதை, உறவுகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நினைவுகள் உள்ளன; அவையே அவர்கள் யார் என்பதை வரையறுக்கின்றன. அந்தக் கதைகளை மீண்டும் பராமரிப்பின் மையத்திற்குக் கொண்டு வருவதற்கான எங்கள் முயற்சியே ரெமினா. பராமரிப்பாளர்கள் நோயை மட்டும் பார்க்காமல், அந்த மனிதரையே பார்க்க உதவுவதே எங்கள் குறிக்கோள். இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு சென்னை ஒரு அர்த்தமுள்ள இடமாகும். ஏனெனில் இந்த நகரம் ஒரு வலுவான மருத்துவ, பராமரிப்பு மற்றும் சமூகச் சூழலைக் கொண்டுள்ளது” என்றனர்.
இந்த இயங்குதள அறிமுக நிகழ்வில், நினைவாற்றல் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பொறுப்புடன் பயன்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், மறதி நோய்ப் பராமரிப்பு வல்லுநர்கள், உதவி-வாழ்க்கை நடத்துபவர்கள் மற்றும் பராமரிப்பாளர் சமூகத்தினரிடையே உரையாடுவதற்கான ஒரு தளமாகவும் அமைந்தது. மறதி நோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களின் சராசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் மனதில் கொள்ளவேண்டுமென மருத்துவர்கள் எடுத்தியம்பினர். மேலும், Neurodegeneration (நரம்புச்சிதைவு) என்பதைப் பொருட்படுத்தாமல், மறதி நோயாளிகள் சின்னச் சின்ன விஷயங்களையும் வேண்டுமென்றே செய்யாமல் நடிக்கிறார்கள் என்ற குடும்ப உறுப்பினர்கள் பொதுவாகக் கோபம் கொள்ளுவார்கள், அதைப் பற்றி பராமரிப்பாளர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும், அப்படி நோயாளிகளின் செயற்பாடுகளில் சுணக்கம் ஏற்படும்போது உடனுக்குடன் மருத்துவருக்கு அறியத் தரவேண்டும் என்றும் ரெமினாக்குக் கோரிக்கை வைத்தனர்.

இந்தியா மற்றும் உலகளவில் மறதி நோய் மற்றும் நினைவாற்றல் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்து வரும் நேரத்தில் ரெமினா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பங்கள், பெரும்பாலும் துண்டு துண்டான தெளிவற்ற தகவல்கள், உணர்ச்சி ரீதியாக சவாலான பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் அன்புக்குரியவர்களை அர்த்தமுள்ள வகையில் பிணைப்பை ஏற்படுத்துவதில் உள்ள சவால் ஆகியவற்றால் போராடுகின்றன. நினைவாற்றல், பராமரிப்புச் சூழல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவி ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பதை ரெமினா நோக்கமாகக் கொண்டுள்ளது. நோயறிதலை மட்டுமல்லாமல், மறதியால் பாதிக்கப்பட்ட நபரையும் நினைவில் கொள்ளும் ஒரு புதிய வகை செயற்கை நுண்ணறிவு சார்ந்த கதை வழி நினைவாற்றல் பராமரிப்புக்கு ஓர் அர்த்தமுள்ள தொடக்கமாக ரெமினா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


